புதன், நவம்பர் 21, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 3

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2

நான் ஈரோட்டுப் பொண்ணு :-)

ஈரோடு-ன்னாலே RKV ரோடு, காளைமாட்டு சிலையையும் தாண்டி பளிச்சென்று நியாபகத்திற்கு வருவது, மஞ்சள். மஞ்சள் விலையில் வீழ்ச்சி, போராட்டம், அரசு கொள்முதல் கோரிக்கை.. ஸ்..ஸ்..ஸ்.. அப்பப்பா.. இது நம்ம தலைப்பே இல்லைங்க..

காலம் காலமாக, ஆண்டு தவறாமல், மஞ்சள் சாகுபடியை விடாமல் பார்த்துக்கொண்டும்/ரசித்துக்கொண்டும், ஈரோட்டுப்பெண்ணின் லயிப்புகளும், சந்தோசங்களின் பகிர்வு தான், இந்தப் பதிவு!

நல்ல கீழ்நோக்கு நாளாய் பார்த்து தான், மஞ்சள் விதைப்பாங்க. அதுக்கு முன்னாடியே ஒரு வாரமாக, குப்பை இறைக்க, பார் கட்ட என்று வேலை மும்முரமா நடக்கும். வீட்ல நம்மையும் ஒரு பெரிய மனுஷியா (?!) மதிச்சு முதல் மஞ்சளை விதைக்க சொல்வாங்க. ஆசையா, சாமியை வேண்டிட்டு விதைக்கும் போது கிடைக்கற கர்வம் இருக்கே.. சான்ஸே இல்ல போங்க..

பிள்ளையை வளர்க்கும் கருத்தில், உரம், தண்ணீர் விட்டு, நல்ல இளம் பச்சை நிறத்தில் தள தள வென்று மஞ்சள் செடி வளர்ந்து கிடக்கும் பாருங்க, அவ்வளவு ஆசையாய் இருக்கும்.

இந்த மஞ்சள் வயல்’ல தாங்க காய்கறிகளுக்கு பஞ்சமே இருக்காது. தக்காளியிலிருந்து பீட்ரூட் வரை எல்லாக் காய் களும் விளைந்து கிடக்கும்.



அப்படியே, வயலிற்குள் புகுந்தோம்’னா, மொட்டு மொட்டாய் மிளகு தக்காளிப் பழங்கள், குட்டி குட்டியாக, ஃப்ரெஷ் ஆக தக்காளிப் பழங்கள் பறித்து சாப்பிட்டுக்கொண்டு, இடை இடையே ஊடுபயிராயிருக்கும் சோளக்கதிருக்கு ஜடை பின்னி, பின்னலில் கொத்துமல்லிப் பூக்களை வைத்து அழகு பார்த்த சுட்டித்தனம்.. எவ்வளவு வருடம் ஆனாலும் மறக்காதுங்க!

பசுமையா செழிப்பா வளர்ந்திருக்கும் மஞ்சள் செடிகளுக்கு நடுவில், எப்படியாவது திருட்டுத்தனமாக முளைத்து, க்யூட்டாக பூ பூத்திருக்கும் சூரியகாந்திக்கும் கோழிக்கொண்டை பூக்களுக்கும் போட்ட் செல்ல சண்டைகள், மஞ்சள் நிற செம்மை பூக்களையும், கத்திரி பூக்களையும் கொண்டு செய்த பூக்கொத்துகள், களை எடுக்கும்போது, ‘இந்த மஞ்சள் எல்லாம் உங்களுக்கு தான், உங்க பட்டிற்கும், நகைக்கும்’ என்று உசுப்பேற்றி விடப்பட்ட ஆசைகள் :-) , ருசியாய் சுட்டுத்தின்ற சோளக்கதிர்கள், லோலாக்காய்த் தொங்கும் மிளகாய்கள், அங்கங்கு விளைந்திருக்கும் கீரைகள், மண்ணிலிருந்து கொஞ்சம் எட்டிப் பார்க்கும் மஞ்சள் கிழங்கு... இப்படி சொல்லி சொல்லி மாள ஆயிரம் விஷயங்கள் இருக்குங்க, எங்க மஞ்சள் ‘ல.


விளைஞ்ச மஞ்சளையெல்லாம் வெட்டி எடுத்து வந்து, வேக வைத்து, காய விட்டு, சலித்து... அப்பப்பா..
18 ரூபாய் பாக்கெட்டில் இருக்கும் 100கி மஞ்சளுக்கு எத்தனை வேலைகள்?!
அதுவும், விடிய விடிய மஞ்சள் வேக வைக்கும் போது, கூடவே விடிய விடிய அலரும் ரேடியோ, அப்பப்ப டீ யை நினைவு படுத்த அவர்கள் கொடுக்கும் சமிங்ஞைகள், உரிமையான கேலி பேச்சுகள்..

மஞ்சள் சலிச்சு முடிச்சு, அடுக்கின மூட்டைகளை திரும்ப திரும்ப எண்ணுவது, மார்க்கர் பென் - ல் அடையாளங்கள் போடுவது.. இவை அவ்வளவும் மஞ்சள் எடைக்கு போட்டுவிட்டு வாங்கி வரும் ஸ்பெஷல் அல்வா காக மட்டும்.. :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

இனி, ஒவ்வொரு மஞ்சள் பொடி பாக்கெட்டிலும் இந்த உழைப்பையும், சந்தோஷத்தையும் உணர்வீர்கள் தானே?!!


3 கருத்துகள்:

  1. இனி, ஒவ்வொரு மஞ்சள் பொடி பாக்கெட்டிலும் இந்த உழைப்பையும், சந்தோஷத்தையும் உணர்வீர்கள் தானே

    பதிலளிநீக்கு
  2. அக்கா!

    அழகான உணர்வுகள்! ஆனா, மஞ்சளு இல்ல... நெல்லு, நிலக்கடல இப்புடி!!!

    :-)

    பதிலளிநீக்கு