வெள்ளி, ஏப்ரல் 27, 2012

Google-ஓ-Google

வாழ்க்கையின் சுவாரஸ்யமே விடை தெரியாத கேள்விகளிலும், புரிந்து கொள்ள முடியாத விசித்திரங்களிலும், விவரிக்கமுடியாத அதிசயங்களிலும் தான் புதைந்து கிடக்கின்றன. ஆனால், இன்றைக்கு விடைதெரியாத கேள்விகள் என்று எதையும் சொல்வதற்கில்லை (தேர்வுகளை விடுத்து :) ) 'கூகிள் இருக்க பயமேன்?'
உண்மையில் Linkedln profile கள் சிம் கார்டுகள் வாங்கவும், Facebook profile கள் திருமணப்பொருத்தம் பார்க்கவும் பயன்படுத்தப்படும் நாட்களுக்கு மிக அருகில் வந்துவிட்டோம் நாம். சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கூகிள்'ஐ நாட ஆரம்பித்து விட்டோம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் நம் தேடல்களே வேறு. 

பாட்டியின் கை வண்ணத்தில் நா ஊரும் பதார்த்தங்கள், தாத்தா வின் சில்லறைகள், புத்தகங்கள், அம்மா பார்த்து பார்த்து எடுத்த புதுத்துணிகள், அப்பாவின் முரட்டுக் கைகடிகாரம், அவரது சட்டைப் பக்கெட்டுகள்.. இப்படி சொல்லி சொல்லி அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றுவரை அதே தேடல்கள் தான், ருசி ருசியான உணவு வகைகள், பேஷன் ஐ பறை சாற்றும் உடைகள், கடிகாரங்கள், வீடியோக்கள், முகம் தெரியாதவர்களிடம் பெறும் அறிவுரைகள், ஆலோசனைகள், பாராட்டுக்கள்... வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எங்கே போய் விட்டன?!

இணையம் உங்களுக்கு சுவாரஸ்யமாகவே தோணலாம். கலர் கலராய் படங்களும், பாப்-அப் விளம்பரங்களும், யாரோ அந்நிய மனிதனின் பீட்டர்-ம் சுவாரஸ்யம் கிடையாது.
நிஜமான சுவாரஸ்யம் எங்கு இருக்கிறது?

நம் பாட்டிகளிடம் கேட்டுப்பாருங்கள், அவர் சொல்லுவார் நூறு ரெசிபிகள். அவை ஒவ்வொன்றும் நம் தாத்தாவுடைய/அப்பாவுடைய/அத்தையுடைய விருப்பமாதாகவே இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமே. அவருடைய சுருக்குப்பையிலிருந்து வரும் கதைகள் யாவும் தாத்தாவின் கம்பீரத்தையும், அப்பாவின் கெட்டிக்காரத்தையும், அத்தையின் விட்டுக்கொடுத்தலையும் கொஞ்சம் மிகையாகவும், மிஞ்சும் சுவையோடும், பீட்டர் விடுவார் பாருங்கள்.. Facebook எல்லாம் தோற்றுப்போய்விடும். 

நம் தாத்தாவிடம் கேட்டுபாருங்கள், அவரது துருப்பிடித்த அரையணா கூட பசுமையான நினைவுகளை விடாமல் பற்றியிருக்கும். அது அவரது முதல் சம்பாத்யமாகக்கூட இருக்கலாம். அவரது முழு உழைப்பிலும், வியர்வையிலும் வெட்டிய கிணறு, ஊற்றுத் தண்ணீ ரை முதல்  முதலில் அள்ளிக்குடித்த பரவசம், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரிக்கும் அவர் வீடு கட்டிய அனுபவம், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த கர்வம், பாம்புகளையும் தேள்களையும் கையில் எடுத்து விளையாடிய வீரம், தென்னை மரமும், பனை மரமும் ஏறத்தூண்டிய இளமை, தூக்கு போசியுடன் அவர் பள்ளி சென்ற பருவம், கட்டை வண்டி கட்டிக்கொண்டு சந்தைக்கு ஷாப்பிங் போனது, தேர் கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தது.. கால இயந்திரத்தில் பயணம் செய்த உணர்வைத்தரும். 'Hall of fames' இல் ஏற்றப்படாத சாதனை மனிதர்கள் இவர்கள்.

நம் அம்மாக்களை கேட்டுப்பாருங்கள், நமக்கு எந்த உடை பொருந்தும் என்று அவரை விட வேறு யாருக்கும் ரசித்து சொல்லத்தெரியாது. அவரது தேர்வுகள் 'Out-of-fashion' ஆகா இருக்கலாம். ஆனாலும் அன்பு, பாசம், பரிவு, கம்பீரம் கலந்த கலவையாக நிச்சயம் இருக்கும். இன்றுவரை என் உடைத்தேர்வுகள் எல்லாம் என் அம்மாவினுடையதே. சிவகிரி வாணி கட் பீஸிலிருந்து ஈரோடு கடை வீதி சுமங்கலி சில்க்ஸ் இல் ஆரம்பித்து சென்னை சில்க்ஸ் வரை கூட தேடல் முடியாது. அதுவும் என் ஒவ்வொரு உடைகளும் பின்னணியிலும் சின்ன சின்ன கோபங்கள், நிறைய சந்தோஷங்கள், அர்த்தமற்ற சண்டைகள், சம்பந்தமே இல்லாத வீரப்புகள் என்று பல சுவாரஸ்யங்கள் புதைந்து கிடக்கும். ஆன்லைன் இல் யாரோ கலர் கலராய் மாடல் களின் பரிந்துரைகளும் ஹிட் லிஸ்ட் உம் அவ்வளவு சுவாரஸ்யமானதா என்ன..?


நம் அப்பாவிடம் கேட்டுப்பாருங்கள் placement  இல் ஆரம்பித்து, வாழ்க்கை வரை. ஏனெனில், அவர் கற்ற பாடங்களும், பெற்ற அனுபவங்களும் ஏராளம். நம்மைப்பற்றி அறியாதவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை விட, நம் தந்தையிடமிருந்து  பெற்றவைகள், ஒரு வினையூக்கி போல, நம்முள் வெற்றி விதையை விதைத்து விட்டுப்போகும்.

இந்த சுவாரஸ்யங்கள் Page ranking algorithm மூலமாகவோ, hit list மூலமாகவோ கிடைக்காது. கொஞ்சம் கூகிள்-ஐ விட்டு வெளியே வந்து பாருங்கள், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்று புரியும்.
சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!!

குறிப்பு: படங்கள் - கூகிள்-கு நன்றி :)

திங்கள், ஏப்ரல் 09, 2012

கோரக்காட்டுபுதூர் Professionals

பொதுவாக நகரத்தில் பணிக்குச் செல்பவர்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.

  • மடிப்பு கலையாத branded சட்டையில் அழுக்கு "டை" கட்டியிருந்தால், அது Management professional 
  • தினமும் காலையில் coolers போட்டுக்கொண்டு கடலை போட்டால், அது IT Professional 
  • பாக்கெட் இல் இரண்டு, மூன்று கலர் பேனா வைத்திருந்தால், அது Engineers .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஒரு profession தான், விவசாயம் - Agriculture - किसान. இவர்களும் அதிகாலைப் பரபரபிற்கும், வார இறுதி கொண்டாட்டத்திற்கும் பழக்கப்பட்டவர்களே. காலை 7.30 மணிக்கு தூக்குபோசில் சாப்பாடு எடுத்துக்கொண்டும், பொறி காகிதத்தில் வெற்றிலையும் பாக்கும், இப்போது புதிதாக செல்போனும் கட்டிக்கொண்டு, பள்ளி செல்லும் குழந்தையின் சலசலப்போடும், ஆரவாரத்தோடும் தொடங்கும் இவர்களது காலைப் பொழுதுகள் , தினம் தினம் தினுசு தினுசாய் வேலை பார்க்கும் சகலகலா வல்லவர்கள். களை பறித்தல் (Debugging), பாத்தி கட்டுதல் (Module development), நீர்  பாய்ச்சுதல் (Prototyping) என்று உடலுக்கும் உள்ளத்திற்கும் சவாலான வேலைகளை அசால்ட்டாக செய்வர். 



இவர்களுக்கும் dress code எல்லாம் உண்டு. வெயிலிலிருந்து தப்பிக்கவும், அரிப்புகளிளிருந்து காத்துக்கொள்ளவும், கணவருடைய / மகனுடைய / சகோதரனுடைய முழுக்கை சட்டைகள், கோட் ஆகவும், பழைய சேலையோ தாவணியோ தலைக்கவசமாகவும் மாறிவிடும். காலையில் தோராயமாக 7.15 மணிக்கு ஊர்முனை பிள்ளையார் கோவிலில் கூட்டம் கூடி, அவரவர் சகாக்களுடன் கூட்டு சேர்ந்து, எவர் காட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்படும். 7.45 மணியளவில் தோட்டத்திற்குள்  கால் வைப்பார். கை, அதன் போக்கில் மும்முரமாக வேலை செய்ய, மனம் வீட்டு பிரச்சனையில் லயித்திருக்க, வாய் வெற்றிலையுடன், திருமதி செல்வத்தையும், தென்றலையும் கடித்துக் குதறிக்கொண்டிருக்கும்.

10 மணிக்கு காலை உணவு! கொய்யா, மா, வாழை மரங்கள் ஆசையாய் தலை கோதி விட, பழைய சோறும், அப்பொழுது தான் மண்ணிலிருந்து  பறித்து எடுத்த வெங்காயமும், கை நிறைய அள்ளிக்  குடித்த கிணற்று  தண்ணீரும்.. அட அட அட.. This is the secret of their energy!



இந்த  1 மணி நேர இடைவெளியில், 1500 ரூபாய் கொரியன் போனில் அட்டகாசமாக பாட்டுபாடி நலம் விசாரிக்கும் கணவன்மார்கள், மிட்டாய் வாங்க  காசு கேட்க வரும் பொடிசுகள், காலேஜ் படிப்பைப்பற்றி விசாரிப்புகள், சின்ன வயதில் செய்த அட்டகாசங்கள், நன்றாக படிக்கவேண்டும், வெயிலில் வர வேண்டாம், நன்றாக சாப்பிட வேண்டும், சத்தாக சாப்பிடவேண்டும், எத்தனை அக்கறைகள், எத்தனை எத்தனை கரிசனங்கள்..சேரனும் தங்கர்பச்சானும் சேர்ந்த  படக்கலவைங்க  இது..

1 மணிக்கு தேநீர் நேரம். கிழக்கு வேலி பார்த்த தென்னை மரமோ, தண்ணீர் மதகோ இவர்களது சிம்மாசனமாய் அமைந்து விடும். எவ்ளோ மொக்கையா டீ கொண்டு போய் குடுத்தாலும், நம்மை விட்டு கொடுக்காமலேயே பேசுவாங்க பாருங்க.. இதுல தான் எங்க மக்களை அடிசுக்க ஆளே கிடையாதுங்க ... 

கண்ணு, பாப்பாத்தி, அழகு மொவர, பட்டுகுட்டி, கொங்கு பொடுசு.. இவங்கள மாதிரி வித விதமா  கொஞ்சி பேசவும் யாராளையும் முடியாது.. 



3 மணிக்கு இவங்க duty முடிஞ்சிரும். வெள்ளிக்கிழமை தான் இவங்களுக்கு salary day. எங்க ஊர் சந்தை அப்போ தான். இவங்களுக்கும் incentives எல்லாம் உண்டுங்க. அறுவடை நாள்கள்'ல நெல்லும், கடலையும் கிடைக்கும். பயிர் விதைக்கிற நாள் ஆகட்டும், அறுவடை தொடங்கற நாள் ஆகட்டும், முடியுற நாள் ஆகட்டும்  நிச்சயம் மிச்சர், போண்டா  வோட 'Tea Party' தான்.

மொத்தத்தில், எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும்  கிடையாது, வாழ்க்கையை  அனுபவிப்பவர்களும்  கிடையாதுங்க ..