ஞாயிறு, நவம்பர் 20, 2011

நட்பின் பரிணாமங்கள்

காதலுக்குப் பிறகு கவிதைகளும், பாடல்களும், திரைப்படங்களும் ஏன் விளம்பரங்கள் கூட கொண்டாடும் ஒரு அழகான கரு நட்பு.

'பகிர்தல்' என்ற வார்த்தையின் உட்பொருளே நட்பில் தான் புரிகிறது. ஐம்பது காசு மிட்டயைக்கூட ஐந்து பங்காக போடும் விசித்திரம் நட்பில் மட்டும் தான் இருக்கும். 

நட்பின் ஆரம்பம் 2 வயதில் நாய் குட்டியுடனோ, பூனைக்குட்டியுடனோ அல்லது பொம்மையுடனோ ஆரம்பிக்கும். சிலேட் பென்சில் வாங்குவதில்/தருவதில் தொடங்குகிறது ஒரு ஆத்மார்த்தமான நட்புடனான நம் பயணம். பிறகு அந்த சிலேட் பென்சில் பரிணாம வளர்ச்சி பெற்று மிட்டாய், அழி ரப்பர் பகிர்தலில் தொடங்கி சி(ப)ல சமயம் வாழ்க்கை பகிர்தலுக்கும் வழி வகுக்கும். 


ஆரம்பங்களில் நட்பு புதிய அறிமுகங்களாகவும், விளையாட்டுத் துணைகளாகவும் அடையாளங் கொள்ளப்பட்டது. மூன்றாம் வகுப்பில் வாய் மொழிப் பாடல்களும், ஏழாம் வகுப்பில் பிசிராந்தையார், ஒளவையார்-அதியமான் நட்புகள் நட்பின் சிறப்பை நமக்கு உணர்த்தும் கருவியாக்கப்பட்டது.

அதற்குப்பிறகு, நட்பு 'பகிர்தல்' பரிணாமத்திற்கு வருகிறது. படிப்பு சார்ந்த, உணவு சார்ந்த பகிர்வுகள் பரவலாக நட்பைத் தீர்மானிக்கும் காலம். பின், கருத்துகள் (கிண்டல்களும் தான்) கேட்பதற்கும் , சொல்வதற்கும் உற்ற துணையோ குழுவோ தேவைப்பட்டது. இங்கு தான் நட்பு அதன் முதல் பரிணாமத்தை  அடைகிறது. "பகிர்தல்"

ஆரம்பத்தில் மகிழ்ச்சி, கிண்டல்,  சில சமயம் சோகத்தைக் கூட பகிர்ந்து கொள்ளும் நம் நட்பு வட்டம், சில சமயங்களில் நம் குழப்பத்தையோ பயத்தையோ சரி வரத் தெளித்து வைக்கும் கலையை கையாள முடியாமல் திணறும். அப்பொழுது தான், நமக்கே நமக்கான ஒரு கை நம் குழப்பங்களை தாங்கிடவும், வழிகாட்டவும் தென்படுகிறது. இப்பொழுது  நட்பு அதன் இரண்டாம் பரிணாமத்திற்கு வந்து விட்டது. "ஆத்மார்த்தமான பகிர்வு"

பெரும்பாலும் பலரது நட்பு இந்த பரிணாமத்தை தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தாய்/தந்தையிடம் பகிர முடியாத, நட்பு வட்டத்தில் கூட கிடைக்காத மன நிம்மதியை  நிச்சயம் அந்த நட்பு கொடுக்கும்.

நட்பின் மூன்றாம் பரிணாமம் சுவாரஸ்ய மானது. "Just-A-minute நட்பு"
முன்பெல்லாம் ரயில் சிநேகிதம், கடித வழி சிநேகிதங்கள் நட்பின் ஆழத்தை புரிய வைத்தன. கடிதங்கள் இ-மெயில் களாகின. (காதல் கோட்டை => காதல் தேசம்). இப்பொழுது இணையம் கைக்குள் சுருங்கிய பிறகு வரிகளின் எண்ணிக்கை குறைந்து, வார்த்தைகள் சுருங்கிப்போயின. அனால், நட்பு வட்டம் மட்டும் நீள்கிறது. 


"The Social Networking Era". இது கூட நன்றாகத்தான் உள்ளது. ஒரே ஒரு சொடுக்கு நம் நட்பினை தீர்மானித்து விடுகிறது. பேஸ்புக், டிவிட்டர் வரிசையில் வலைபூத்தளங்களுக்கு என் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். செமஸ்டர் பரிச்சை நடு இரவில் கூட என் கருத்துகளை பகிர்வதற்கு ஒரு வட்டம் இருக்கிறது என்ற நட்புணர்வு என்னை சிறகடிக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் கூட பகிர்தலில் தான் சக்கை போடு போட்டுகொண்டிருக்கின்றன. எனவே, உங்களது அன்றாடத் தேடல்களில் மத்தியில், சந்தோஷங்களையும், துக்கங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தினம் தினம் காலைப்பனி முதல் இரவு நேரத்து வண்டுகளின் ரீங்காரம் வரை ரசித்துப்பகிர்வதர்க்கு  பல விஷயங்கள் உள்ளன. பகிருங்கள், பேஸ்புக் இல் அல்ல, உங்கள் நட்பிடம்.                                                 



வெள்ளி, நவம்பர் 04, 2011

என் விடுதி சாளரமும் மழைத்துளியும்..

அடை மழை வெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே ஏக்கத்துடன் நோக்குகிறேன். நான் இருப்பதோ மூன்றாம் மாடியில். மழை சாரலுக்காக ஏங்கி கையை விட்டு எம்பிப்பார்த்தும் முடியவில்லை. பச்சை பசேல்  செயற்கை புல்வெளி, இரும்பு வேலியில் படர்ந்திருந்த செடியின் குட்டியூண்டு பிங்க் நிற செம்பருத்தி. தொலைவில் பரந்து விரிந்த கால்பந்து மைதானம். தேங்கி நிற்கும் மழை நீர். இதற்கு மேல் எனக்கு வர்ணனை வர வில்லை.

கிராமத்து மழை நாட்கள் எப்படி இருக்கும் தெரியுமா? சூரிய வெளிச்சம்  மங்க ஆரம்பித்த உடனே தாத்தா, பாட்டிகள், கண்ணுக்கு கையால்  குடை பிடித்து வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, மழை நிலவரம் கூறுவார். 'மேகம் கலந்ஜிருக்கு, தெக்கால பெய்யுது, வானம் கருக்குது, வெரசா வேலைய முடிங்க' என்று ஏகப்பட்ட வர்ணனைகள், கட்டளைகள். சன் டிவி ரமணன் வாக்கு கூட பொய்க்கும் ங்க, எங்க தாத்தா, பாட்டி வாக்கு நிச்சயம் பொய்க்காது. விறகு எடுத்து வைக்கறது, மாடுகளை தண்ணீர் காட்டி கட்டுவது, ஆடுகளை பட்டிக்குள் அடைப்பது என்று ஒரு பக்கம், ரோஜா செடி மொட்டுக்களை பறித்து வைப்பது ஒரு பக்கம், டிவி, பிரிட்ஜ் வயர் பிடுங்கி விடுவது ஒரு பக்கம், சிம்னி விளக்கு தேடுவது, கப்பல் விட காகிதம் தேடுவது.. இப்படி எத்தனை  களேபரங்கள், எத்தனை பரபரப்புகள்..


மழை தூரலுக்காக தலையில் சாக்கு போர்த்திக்கொண்டு செல்லும் ஒரு கூட்டம், மழை  க்கு ஒதுங்கும் அந்நிய விருந்தாளிகள், அவர்களின் ஏதேனும் ஒரு வழி சொந்தத்தை கண்டுபிடித்து உரிமையோடு பேசும் பாட்டி, 'இந்த பூனையை காணோம், எங்கே குளிருக்கு நடுங்கிக்கொண்டிருகிறதோ' என்று கரிசனப்படும் தாத்தா, கப்பல் விடலாம் அன்று நச்சரிக்கும் தம்பி, சளி பிடிச்சுக்கும் என்று அதட்டும் அப்பா, என்ன வேணும் பஜ்ஜியா, போண்டாவா என்று குறிப்பறிந்து கேட்கும் அம்மா..

வாளியில் மழை நீரைப்பிடித்து முகம் கழுவிய அந்த 'சில்' ஸ்பரிசம், சிம்னி விளக்கில் குளிர் காய்ந்த கதகதப்பு, ஆடு மாடுகளின் வித்யாசமான கூப்பாடுகள், இப்படியே மழை பேஞ்சா ஸ்கூல் லீவ் விட்றுவாங்களோ, தும்மல் வருதே நாளைக்கு காய்ச்சல் வந்துருமோ என்ற சின்ன சின்ன சந்தோஷமான  எதிர்பார்ப்புகள்...



இப்போது இதை எல்லாம்  எங்கோ தொலைத்து விட்டேனா??

நடு இரவில் துண்டிக்கப்படும் மின்சாரம், அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு நிற்கும் குழந்தை போல ஆடு மாடுகள், நிறம் மாறிய பண்ணை தண்ணீர்,  சில்லிட்டு  வரும் குழாய் நீர், தலை துவட்டாமல் நிற்கும் மரங்கள், உரல் நீரை வடித்து மழை அளவைக் கூறும் பாட்டி, இன்றைய வயல் வேலை கெட்டு விட்டது என்று வருந்தும் தாத்தா.. மழையால் தங்கள் வயல் வேலை கெட்டு விட்டது என்று குற்றம் சொல்லும்போது கூட, 'இன்றைய தினம் நமக்கு ஓய்வு' என்று அவர்களின் மனமும், உடலும் நிச்சயம் ஆசுவாசப்பட்டுக்கொள்ளும். 

காலையில் பெர்மிசன் போட்டு விட்டு வரும் சூரியன், தாமதமாக வரும் பள்ளி பேருந்து, வருமா வராதா  என்ற நிலையில் எங்க ஊர் மினி பஸ், மேலும் உற்சாகமாய் வரும் பண்பலை வர்ணனைகள்... அடுத்த நாள் சோம்பல் கூட சுகம் தானே??



இன்று, மழை நாளில் சூடாக பஜ்ஜி சாப்பிடலாம் என்று Cafeteria போனால் தீர்ந்து போயிருக்கும். இன்னும் பல நாட்கள் மழை பெய்ததா இல்லை செடிக்கு தண்ணீர்  விடப்படிருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கும். பின் கைபந்து மைதானம் உண்மையை உரைக்கும். 

சதா சாளரங்களை அடைத்துக்கொண்டு Head-set மாட்டிக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கும் பிடித்து விட்டதா? புரியாமல் எதிர்பார்கிறேன் அடுத்த மழை நாளுக்காக..