புதன், ஆகஸ்ட் 15, 2012

என் செல்லத் தம்பிக்காக ஒரு பதிவு


சூரியப்பிரகாசம். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் என் செல்லத்தம்பி. வருகின்ற 18-ம் தேதியன்று 16-ம் பிறந்த நாள் அவனுக்கு.


1997, ஆகஸ்ட் மாதம், கிட்ட தட்ட 2 மாதங்கள் அம்மாவைப்பிரிந்து பாட்டியிடம் வளர்ந்த ஏக்கம், சூர்யா பிறந்து, 2 ம் நாள் மருத்துவமனையில் அம்மா மடியில் அவனைப்பார்த்த மாத்திரத்தில் அந்த ஏக்கம் பொறாமையாக உருமாறி அழுகையாய் வந்தது. என்னை விட தம்பி கலராய் இருக்கிறான் என்று கூடுதல் கடுப்பு வேறு. ஆனாலும் கூட, அவன் விக்கலுக்கு காரணமாய், அவன் சிரிப்புக்கு சொந்தகாரியாய், அவன் சேட்டைகளுக்கு ரசிகையாய், அழுகைக்கு தாலாட்டாய் மாறித்தான் போனேன். அவனுக்காக கற்றுக்கொண்ட தாலாட்டெல்லாம், அவன் நினைவுகளுடன் பசுமையாய் என்னுள் இன்னும் இருக்கிறது.

‘உங்கு குடிக்கறியா..
ஊறுகாயி திங்கறியா..
பாலு குடிக்கறியா..
பழைய சோறு திங்கறியா..”


 அப்பவும் அவன் அழுகை நிக்காமல் போக, பள்ளியில் பாடும் ‘prayer song' - ஐ எல்லாம் பாடி, சில சமயம் வென்றும், பல சமயம் தோற்றும் போயிறுக்கிறேன்.


அவன் பள்ளி செல்ல ஆரம்பிக்கையில், அவனுக்காக பென்சில் டப்பாவையும், வாட்டர் பாட்டிலையும் பார்த்து பார்த்து வாங்கிய நான், அவன் வளர்ந்த பின் பென்சில்களுக்கும் பேனாக்களுக்கும் சண்டை போட்டேன். அவனை மிரட்ட டைரியில் புகார்கள் எழுதியது, நான் மார்க் வாங்கிய அழகிற்கு அவன் படிப்பை குறை கூறியது என்று அவனது பள்ளிப்பருவத்தில் பெரிய மனுஷித்தனமாய் மாறிய நான், இன்று அவனது பெரிய மனுஷித்தனத்தில் குழந்தையாகவே மாறிப் போகிறேன்.
                                   
'அக்கா விடம் காசே இல்லை டா’ என்று பொய்யாக புலம்பினால் கூட, அவன் சேமிப்பைக் கொண்டு வந்து கொடுப்பதில் ஒரு தந்தையின் பரிவை உணர்ந்தேன்.

அல்சர் வலியில் துடித்த போது, ‘ஒழுங்காக் சாப்பிடு’ என்று திட்டியபோதும், அவன் சுட்டுத் தரும் தோசை, பனியாரங்களிலும், போட்டுத்தரும் பூஸ்ட்-டிலும், அக்காவிற்கு பிடிக்கும் என்று சேகரித்து வைத்திருக்கும் கொய்யாப்பழங்களிலும், சீத்தாப்பழங்களிலும் , அவன் வளர்த்துக்கொண்டிருக்கும் ரோஜா, செவ்வந்தி செடிகளிலும், எனக்கு வைத்து விட்ட மருதாணிகளிலும், தலைவலியின் போது பொட்டுவிட்ட தைலங்களிலும் ஒரு தாயின் அரவணைப்பை உணர்கிறேன்.

வீட்டிற்கு வந்திருக்கும் திருமண அழைப்பிதழ்களை குறிப்பிட்டு, ‘அக்காவிற்கு இதை விட சூப்பராக இருக்கவேண்டும்’ என்று சொல்லும் போதும், என் வேலையைப்பற்றி அம்மா பேசும் போதெல்லாம், ‘இவ்வளவு நாட்கள் விடுதியில், இப்போது வேலை வேலை என்றால், அக்காவை வீட்டில் வைத்திருக்கும் எண்ணமே இல்லையா?’ என்று வாதிடும் போதும் ஒரு அண்ணனின் அக்கறையை உணர்கிறேன்.

தூங்கும்போது தலை கோதி விடச்சொல்வதிலாகட்டும், குட்டி குட்டி தோசை சுட்டு குடுக்கச்சொல்வதிலாகட்டும், சாப்பாடு ஊட்டி விடுவதிலாகட்டும், சண்டை பொட்டுக்கொல்வதிலாகட்டும்.. இன்னும் என் சுட்டித் தம்பியாகவும் இருக்கிறான்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் இரவுகளில், வாசலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டே தொடங்கும் எங்களின் கனவு உலகம். அவன் படிப்பிலிருந்து, எனக்கு கிடைக்கப்போகும் வேலை, அப்பாவின் கோபம், அம்மாவின் ருசியான உணவு, ஆத்தாவிடம் பொட்ட சண்டை, அய்யா விடம் வாங்கிய திட்டு, அவன் சைக்கிளில் செய்த சாகசம், புதிதாக வந்திருக்கும் செல்போன், அவனைக் கவர்ந்த விளம்பரங்கள், புதிதாக வந்திருக்கும் திரைப்படங்கள், செய்தித்தாள்களில்ருந்து வெட்டி எடுத்த புது மாடல் கார்கள், எங்கள் சுற்றுலா ஆசைகள், வாங்க ஆசைப்படும் பொருட்கள் வரை பேச பேச ஆயிரம் கனவுகள், லட்சியங்கள் என்று எங்கள் நட்சத்திர உலகம் விரிந்து கொண்டே போகும்.

                                             

அவனது கனவுகள் கை கூடவும், மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், வானம் வசப்படவும், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்..
அன்பு அக்கா,
ரஞ்சனி.


My last year's birthday wishes to Surya,


வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

ஈரமான நினைவுகளுடன் நான்..

ஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவை மேலும் விரட்டி, அம்மாயி வீட்டிற்கு பொழுது சாயத்தொடங்கும் வேளையில் நுழைகையில், உள்-வாசலில், விறகு அடுப்பில், இரும்பு சட்டியில், பருப்பு வடையும், கச்சாயமும் மணந்து கொண்டிருக்கும். அதற்குப்பின், பெரியம்மா, சித்தி, தங்கச்சி, தம்பிகள், அண்ணன்கள் வந்து சேர உள்-வாசல் களைகட்டியிருக்கும். சூட்டொடு சூட்டாக வடையும், கச்சாயமும் சாப்பிட்டு முடித்தவுடன், டிவி. டிவிக்கும், வீடியோ கேமிற்கும் ரகளையே நடக்க, இறுதியில், பொய்யான வாக்குறுதிக்காகவும், அதிகஅப்படியான புகழ்ச்சிக்காகவும், டிவியே ஜெயித்திருக்கும். (அரசியல்வாதிகள் ரெஞ்சிற்கு இறங்கிவிட்டோமோ?!)

டிவி அலரும் சத்தம் கேட்டவுடன், திட்டு கிடைக்கும். ‘இங்க வந்து பேசிட்டு இருக்கலாம்’ல, அந்த டிவி ல அப்படி என்ன தான் இருக்கு?’ என்று. என்ன இருக்குனு சத்யமா சொல்லத்தெரியலங்க. டிவி அது பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்க, எனக்கும் ஒரு வருடமே இளையவளான என் தங்கைக்கும் பேச ஆயிரம் கதைகள் இருக்கும். அந்த  நேரத்தில் சாப்பாடு கூட மறந்துபோயிருக்கும். அம்மாக்கள் கூட்டம் திண்ணையில் இடம் பிடித்து பேசிக்கொண்டிருக்க, குட்டீஸ்கள் ஒரு மூலையில் விளையாடிக்கொண்டிருக்க, அம்மாயி மட்டும் கூடிய வரை அனைவரையும் சாப்பிட அழைக்க முயன்று தோற்றுக்கொண்டிருப்பார்.

                                   
அடுத்த நாள் காலை 8 மணி விழிப்பு, எழுந்ததும் குளிக்கச்சொல்வதை காதிலே வாங்காமல் நாள் முழுக்கத்திரிவது, கோவிலுக்கு போகச்சொல்லியதை கேட்டதே கிடையாது. காலையில் திண்ணையில் பந்தி போட்டுக்கொண்டு சாப்பிட்டது, பிடிக்கவே பிடிக்காத இட்லியை கணக்கில்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு சாப்பிட்டது, திட்டு வாங்கிக்கொண்டு டிவி பார்த்தது, எங்கள் அக்கா-தங்கை பாசம் தான் பெரியது என்று அம்மாக்களிடம் வாதிட்டது, அம்மா, சித்தி, பெரியம்மா, அம்மாயி என்று அனைவரின் கைப்பக்குவத்தில் செய்த மதிய விருந்து, கோவிலுக்கு போய்விட்டு வந்து அப்பச்சி பிரசாதம் குடுக்கையில் ”என்னடா, இத்தனை பேர் இருக்கிங்க, கோவிலுக்கு வந்திருக்களாம்’ல?”என்று திட்டாமல் திட்டுவது, அன்று, புதிதாய் ரிலீஸ் ஆகியிருந்தது விஜய் படமாகவே(!) இருந்தாலும், அன்று இரவுக் காட்சிக்கு 3, 4 வண்டிகளில் போய்விட்டு வந்த கொடுமுடி KPS தியேட்டர், பின், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அவரவர் வீட்டிற்கும், பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லக்கிளம்பியது... அடுத்த ஆடி - 18 வரும் வரை திகட்டாத நினைவுகள்!!

ஆனால், இந்த வருடம்? பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரியின் விடுதியில்!
பக்கத்திலிருந்து சொல்வதற்கு அம்மாயியும் இல்லை, திட்டுவதற்கு அப்பச்சியும் இல்லை. கைபேசியில் பேசும் போது, ’அடுத்து தீபாவளிக்கு வந்து விடலாம்’, என்று அவர்கள் சொன்ன சமாதானங்கள் எல்லாம் என் புத்திக்கு உரைக்கவே இல்லை. அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, கோவிலுக்கு சென்றுவந்து, அம்மா விடம் கைபேசியில் பேசிய போது, எனக்கே ஆச்சர்யம்! நானா இப்படி?! :)


அன்றைக்கு எனக்கு பிடித்த நூடில்ஸ் தான் காலை உணவு என்றாலும், பிடிக்காத இட்லி யையே எதிர்பார்த்தது என் மனம். எப்பொதும் போல வகுப்பில் அரட்டையும், கச்சேரியும் அன்று அதிகமே என்றாலும், மனம் பருத்திக்கொட்டாம்பாளையத்திலேயே இருந்தது. குறுந்தகவல்கள் அனுப்பியும் பதில் அனுப்பாமல் இருந்த தங்கையின் மீது பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. முதல் நாள் இரவு கைபேசியில் பேசும் போது வந்த இரைச்சலும், நானே கற்பனை செய்து கொண்ட வடையின் மணம் வேறு நினைவில் வந்து கடுப்பேற்றியது, சுமார் 2,500 மைல் தொலைவில் இருந்து வந்திருந்த தம்பியையும், 105 - ஏ மைல் தொலைவில் இருந்தும் வர முடியாமல் போன என்னையும் எண்ணி ஆற்றாமையில் உறைந்தேன்.

நிழலின் அருமை வெயிலின்போது தான் தெரியும்’ என்பதை முழுதாய் உணர்கிறேன், இன்று!