வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

ஈரமான நினைவுகளுடன் நான்..

ஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவை மேலும் விரட்டி, அம்மாயி வீட்டிற்கு பொழுது சாயத்தொடங்கும் வேளையில் நுழைகையில், உள்-வாசலில், விறகு அடுப்பில், இரும்பு சட்டியில், பருப்பு வடையும், கச்சாயமும் மணந்து கொண்டிருக்கும். அதற்குப்பின், பெரியம்மா, சித்தி, தங்கச்சி, தம்பிகள், அண்ணன்கள் வந்து சேர உள்-வாசல் களைகட்டியிருக்கும். சூட்டொடு சூட்டாக வடையும், கச்சாயமும் சாப்பிட்டு முடித்தவுடன், டிவி. டிவிக்கும், வீடியோ கேமிற்கும் ரகளையே நடக்க, இறுதியில், பொய்யான வாக்குறுதிக்காகவும், அதிகஅப்படியான புகழ்ச்சிக்காகவும், டிவியே ஜெயித்திருக்கும். (அரசியல்வாதிகள் ரெஞ்சிற்கு இறங்கிவிட்டோமோ?!)

டிவி அலரும் சத்தம் கேட்டவுடன், திட்டு கிடைக்கும். ‘இங்க வந்து பேசிட்டு இருக்கலாம்’ல, அந்த டிவி ல அப்படி என்ன தான் இருக்கு?’ என்று. என்ன இருக்குனு சத்யமா சொல்லத்தெரியலங்க. டிவி அது பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்க, எனக்கும் ஒரு வருடமே இளையவளான என் தங்கைக்கும் பேச ஆயிரம் கதைகள் இருக்கும். அந்த  நேரத்தில் சாப்பாடு கூட மறந்துபோயிருக்கும். அம்மாக்கள் கூட்டம் திண்ணையில் இடம் பிடித்து பேசிக்கொண்டிருக்க, குட்டீஸ்கள் ஒரு மூலையில் விளையாடிக்கொண்டிருக்க, அம்மாயி மட்டும் கூடிய வரை அனைவரையும் சாப்பிட அழைக்க முயன்று தோற்றுக்கொண்டிருப்பார்.

                                   
அடுத்த நாள் காலை 8 மணி விழிப்பு, எழுந்ததும் குளிக்கச்சொல்வதை காதிலே வாங்காமல் நாள் முழுக்கத்திரிவது, கோவிலுக்கு போகச்சொல்லியதை கேட்டதே கிடையாது. காலையில் திண்ணையில் பந்தி போட்டுக்கொண்டு சாப்பிட்டது, பிடிக்கவே பிடிக்காத இட்லியை கணக்கில்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு சாப்பிட்டது, திட்டு வாங்கிக்கொண்டு டிவி பார்த்தது, எங்கள் அக்கா-தங்கை பாசம் தான் பெரியது என்று அம்மாக்களிடம் வாதிட்டது, அம்மா, சித்தி, பெரியம்மா, அம்மாயி என்று அனைவரின் கைப்பக்குவத்தில் செய்த மதிய விருந்து, கோவிலுக்கு போய்விட்டு வந்து அப்பச்சி பிரசாதம் குடுக்கையில் ”என்னடா, இத்தனை பேர் இருக்கிங்க, கோவிலுக்கு வந்திருக்களாம்’ல?”என்று திட்டாமல் திட்டுவது, அன்று, புதிதாய் ரிலீஸ் ஆகியிருந்தது விஜய் படமாகவே(!) இருந்தாலும், அன்று இரவுக் காட்சிக்கு 3, 4 வண்டிகளில் போய்விட்டு வந்த கொடுமுடி KPS தியேட்டர், பின், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அவரவர் வீட்டிற்கும், பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லக்கிளம்பியது... அடுத்த ஆடி - 18 வரும் வரை திகட்டாத நினைவுகள்!!

ஆனால், இந்த வருடம்? பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரியின் விடுதியில்!
பக்கத்திலிருந்து சொல்வதற்கு அம்மாயியும் இல்லை, திட்டுவதற்கு அப்பச்சியும் இல்லை. கைபேசியில் பேசும் போது, ’அடுத்து தீபாவளிக்கு வந்து விடலாம்’, என்று அவர்கள் சொன்ன சமாதானங்கள் எல்லாம் என் புத்திக்கு உரைக்கவே இல்லை. அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, கோவிலுக்கு சென்றுவந்து, அம்மா விடம் கைபேசியில் பேசிய போது, எனக்கே ஆச்சர்யம்! நானா இப்படி?! :)


அன்றைக்கு எனக்கு பிடித்த நூடில்ஸ் தான் காலை உணவு என்றாலும், பிடிக்காத இட்லி யையே எதிர்பார்த்தது என் மனம். எப்பொதும் போல வகுப்பில் அரட்டையும், கச்சேரியும் அன்று அதிகமே என்றாலும், மனம் பருத்திக்கொட்டாம்பாளையத்திலேயே இருந்தது. குறுந்தகவல்கள் அனுப்பியும் பதில் அனுப்பாமல் இருந்த தங்கையின் மீது பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. முதல் நாள் இரவு கைபேசியில் பேசும் போது வந்த இரைச்சலும், நானே கற்பனை செய்து கொண்ட வடையின் மணம் வேறு நினைவில் வந்து கடுப்பேற்றியது, சுமார் 2,500 மைல் தொலைவில் இருந்து வந்திருந்த தம்பியையும், 105 - ஏ மைல் தொலைவில் இருந்தும் வர முடியாமல் போன என்னையும் எண்ணி ஆற்றாமையில் உறைந்தேன்.

நிழலின் அருமை வெயிலின்போது தான் தெரியும்’ என்பதை முழுதாய் உணர்கிறேன், இன்று!



6 கருத்துகள்:

  1. அழகிய நினைவூட்டலும், இழந்ததின் ஏக்கமும்! மிக அழகு!

    பதிலளிநீக்கு
  2. அடடா..பகல் கனவு பலிக்கலியே...ஓகே...அடுத்த முறை போய்ட்டு வாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குத்தானே எதிர்பார்த்துக்கொண்டிருகிறேன்.. கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி .. :)

      நீக்கு