சனி, ஜனவரி 07, 2012

உங்களுக்குள்ளும் ஓர் குழந்தை

உலகில் ரசிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. இயற்கையும் இயற்கையின் ஆச்சர்யங்களும், வாழ்க்கையும் வாழ்க்கையின் சுவாரசியங்களும், மனிதனும் மனிதனின் பரிணாமங்களும்.. மனிதர்களின் பரிணாமங்கள் விநோதமானவை. பூக்களின் மெல்லிய ஸ்பரிசத்துடனும், வெண் பஞ்சு மேகங்களின் எடையிலும் ஜீவித்த நாம், காலச்சக்கரத்தில் சுழன்று, வாழ்க்கையால் உரமேற்றப்பட்டு, அனுபவங்களால் பலப்பட்டு, தேடல்களை லட்சியமாக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு பரிணாமங்களிலும் நமது தனிப்பட்ட அடையாளங்களையும் லட்சியங்களையும் தொலைத்துவிட்டு/ புதைத்துவிட்டு/ பறிகொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறோம். சின்னச் சின்ன சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள், அந்தந்த பருவத்திற்கே உரிய துள்ளல்கள், ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள்.. கொஞ்சம் நினைவு கூர்ந்து பாருங்களேன், சம்பளம், வேலை நேரம், சாலை நெரிசல், வாடிக்கையாளர்கள், வங்கிக்கணக்கு, வருமான வரி பரபரப்புகளிலிருந்து விலகி செல்ல செல்ல நம் உலகம், நமக்கே நமக்கான உலகம் விரியும்.




ஒரு காலத்தில் ஐந்து ருபாய் கோன் ஐஸ் வாங்குவதே உச்சகட்ட லட்சியமாக இருக்கும், கோவிலில் போட்ட ஒரு ரூபாயில் பெருமிதம் மிதக்கும், பிறந்த நாளின் 25 பைசா மிட்டாயிலும் விண்ணளவு சந்தோசம் இருக்கும், பாகு மிட்டாய்க்கு இனாமாக கிடைக்கும் மோதிரத்தில் உலகையே வென்று விட்ட திருப்தி ஏற்படும். அந்த சந்தோஷங்கள் இப்போது நிச்சயம் கிடைக்காது. ஏனெனில், அன்று நம் பாதைகளில் பட்டாம்பூச்சிகளும், பலப்பங்களும், பெட்டிக்கடைகளும், சைக்கிள்களுமே  அதிகம். இன்று அப்படி இல்லை. நம் பாதைகள் முழுவதும் பளபளக்கும் கட்டிடங்களும், குளிரூட்டி ஏற்றப்பட்ட கண்ணாடிகளும் தான்.

வாழ்க்கையில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை. இதன் மூலம் புதைந்து போன நம் உலகை மீட்கலாம். பால்ய வயதில் நமக்கென்றே ஒரு சுட்டித்தனத்தை வைத்திருப்போம். விரல் சூப்புவது, சோப்பு நுரையில் விளையாடுவது, பென்சிலால் கிறுக்குவது, குச்சி மிட்டாயை எச்சில் வழிய சாப்பிடுவது, சாப்பிடும் பொழுது கை முழுக்க அப்பிக்கொண்டு விளையாடுவது, சிறு முறுக்குகளை விரலில் மாட்டிக்கொண்டு கடித்து சாபிடுவது, வேண்டுமென்றே காலணிகளை மாற்றிப்போட்டுக்கொண்டு ஓடுவது, ரொட்டிகளை பாலில் உடைத்துபோட்டு சிறு கரண்டியை கொண்டு ரசித்து ரசித்து சாப்பிடுவது, தண்ணீரை குழாய் போட்டு உறிஞ்சி உறிஞ்சி குடிப்பது, பாலில் வரும் வெள்ளை நுரைக்ககவே ஆற்றி ஆற்றி குடிப்பது.. ஏதேனும் குழந்தையிடம் இதைக்கண்டாலே நம் உள்ளம் ஆர்ப்பரிக்கும். அந்த ஒரு நொடியில் குழந்தையாகவே மாறி விடத்தோணும். மாறுவோம், குழந்தையாகவே மாறிப் பார்ப்போமா?? இது நம் உலகம், நம் வாழ்வு, நம் சந்தோசம். காலையில் காபி யின் நுரையை அனுபவிப்பது முதல் இரவு டிவி ரிமோட்டின் சிகப்பு பட்டனை அழுத்துவது வரை, நம் ராஜ்யமே..



கொஞ்சம் உங்கள் அடி மனசின் ஆசைகளை வெளி கொண்டு வாருங்களேன்.. சின்ன வயதில் 1, 2, 3, A, B, C அன்று வித விதமாக சுட்டு உண்ட தோசையை இப்போது உண்ண ஆவல் பிறக்கவில்லையா, குட்டியூண்டு தோசையை ஒரே வாயில் விழுங்கிய நாட்கள் நினைவிற்கு வர வில்லையா?, புள்ளி வைத்து வரைந்து பழகிய விளக்குகள், சங்குகள், கட்டம் போட்டு எழுதி பழகிய எழுத்துக்கள், எப்பொழுதும் வரையத்தூண்டும் ஓட்டு வீடு, பார்த்து பார்த்து வரையும் புகை போக்கி, கதவின் கைப்பிடி, ஆண்டனா, 2 புள்ளி  2 வரிசை கோலம், இரண்டு மலைகளின் நடுவே உதிக்கும் சூரியன், அதனடியில் ஓடும் நதி, நதியின் நடுவே பரிசல் போடும் படகோட்டி.. இதழோரம் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் பரவச்செய்யும்.


அலுவலக இறுக்கத்தை குறைக்கவும், நம்மை நாமே ரசிக்கவும், வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்கவும், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்  கொண்டு வாருங்கள். 4 வரிக்கொடுகளில் cursive writing எழுதுவதில் கிடைக்கும் தளர்வு, ஓட்டு வீடு வரைவதில் வரும் கற்பனை எண்ணங்கள், நுரை பொங்கும் காபி'யில் கிடைக்கும் ருசி, சோப்பு நுரையில் வரும் மொட்டுகளை ரசிப்பதில் வரும் குதூகலம், விரல் சூப்புவதில் கிடைக்கும் சுகம், கப்பல் செய்து விடுவதில் கிடைக்கும் துள்ளல், நூடில்ஸ் ஐ உயரத் தூக்கி சாப்பிடுவது, உறிஞ்சி டம்ப்ளரில் தண்ணீர் குடிப்பது, ஒரு வட்டத்திற்கு கண், காத்து, கொஞ்சு, வால் எல்லாம் வரைந்து பூனையாக கற்பனை செய்து பார்ப்பது, பேப்பர்'இல் புத்தகத்தில் வரும் படத்திற்கு மீசை, பொட்டு, வளையல் அணிவித்து ரசிப்பது... இன்னும் எத்தனை எத்தனையோ... அனுபவிப்போம், நம் புது உலகத்தை, ஒரு குழந்தையின் ஆர்பரிப்புடனும்  துள்ளலுடனும்.


5 கருத்துகள்:

  1. வாழ்க்கையின் இன்னொரு சுவராசியமான பக்கத்தினை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி.. சுவாரஸ்யமான வாழ்க்கை க்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நினைவுகள் கிளறப்படுகின்றன!!!

    #லாஸ்ட் சண்டே உங்க ஏரியா வந்து இருந்தேன்....
    ஹேப்பி பொங்கல்!!!

    பதிலளிநீக்கு
  4. @வெளங்காதவன் மிக்க மகிழ்ச்சி.. இனிய உழவர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

    பதிலளிநீக்கு