வெள்ளி, ஜனவரி 20, 2012

சொக்காய்களும், Branded சட்டைகளும்

சொக்காய்கள். நிச்சயம் பரணில் கண்டிருப்பீர்கள். நம் தாத்தாக்கள் அல்லது நம் அப்பாக்களின் கம்பீரத்தை, சாந்தத்தை பறைசாற்றியவைகள் இப்பொழுது அலமாரிகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கு அவற்றை அணிந்து அழகு பார்க்க ஆசை ஏற்பட்டதுண்டா? நிச்சயம் யோசித்து பதில் சொல்லவேண்டியிருக்கும் . சட்டைகளுக்கும் சொக்காய்களுக்கும்  வித்தியாசங்கள் பெயரளவில் மட்டுமே. அன்று கை முட்டி வரையும்  கால் முட்டி வரையும் தொங்கிய சொக்காய்கள், இன்று 'Slim fit' ஆக மாறி விட்டன. மற்றபடி, சொக்காய்களைப் போல  இரு பக்க வளைவுகளும், குறுக்கு வெட்டுகளும் இன்று branded என்ற பெயரால் சக்கை போடு போட்டுக்கொண்டிருகின்றன. உண்மையில், பேஷன் என்பதை உற்று நோக்கினால் பழமையும் தொன்று தொட்ட பழமையும் புரியும்.

உண்மையில், இந்த தலைப்பின் உட்கருத்தே தலைமுறை இடைவெளி தான். இந்த இடைவெளி என்பதே ஒரு மாயை. வெள்ளை அல்லது  பளீர் நிறங்களில் சொக்காய் அணிந்தவர்களும், கட்டம், கொடு போட்ட சட்டையும், கண்டபடி கிறுக்கிய டி-சர்ட் அணிந்த நாமும் வேகத்தினாலேயே மாறுபடுகிறோம். இதனை வேகம் என்று சொல்வதை விட விவேகம், நிதானம் என்றே கூற வேண்டும். 

நம் முன்னோர்கள் மணிக்கு 15 மைல் வேகத்தில் பயணித்தாலும், சாலையின் இரு புறம் உள்ள மூலிகைகளை பற்றி தெரிந்து கொண்டும், உலக ஞானத்தை வளர்த்துக்கொண்டும், மக்களோடு மக்களாக பயணித்தார்கள். நாம் அப்படியா?!
மணிக்கு 144 கி.மீ., பறக்கும் இரு சக்கர வாகனங்களும், 250 கி.மீ., வேகத்தில் சீறிப்பாயும் சொகுசு கார்களும் நம் வேகத்திற்கு ஈடு குடுக்காமல் திணறித்தான் போகின்றன. சாலையோர மைல் கால்களைக்கூட காண முடியாத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். நமக்கு வழி காட்ட செயற்கை கோள்களும், உலக ஞானம் அறிய கூகுள்-ம், மக்கள் தொடர்புகளுக்கு facebook ம், கைக்குள்ளேயே  சுருண்டு கிடக்கிறது. உண்மையில், நாம் தான் அதற்குள் சுருண்டு கிடக்கிறோம்.

எங்கள் தாத்தா, இளையப்பகவுண்டர் முன்னால் நான் பல முறை வெட்கி தலை குனிந்துள்ளேன். அவரது அனுபவத்தில் முன்னால் அல்ல. அவரது அனுபவத்திற்கு முன்னால் என்றால் கூட பெருமையே பட்டிருப்பேன்.  அவரது புத்திக்கூர்மை மற்றும் நினைவாற்றல்  முன்னால் அல்லவா தினம் தினம் தோற்றுப்போய் கொண்டிருகிறேன்? இந்த வருடம் சரஸ்வதி பூஜை யின் போது அவர் என்னை சரஸ்வதி துதி பாடச்சொல்லிய போது, சுத்தமாக என் நினைவில் பாடல் இல்லை. இத்தனைக்கும், 12 வருடங்கள் என் பள்ளியில் வாரமொரு முறை பாடிய பாடல் அது. ஆனால், அதே பாடலை, தன் 7- ம் வயதில் கற்ற அதே பாடலை எங்கள் தாத்தா,  இப்போதும் பிறழாமல் பாடினார். தினமும் காலை ஒரு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என்று காதுக்குள் வழியும் இசையோடு தான் என் பொழுதுகள் கழிகின்றன. எங்கே தடுமாறுகிறோம் நாம்? 

ஏறக்குறைய 35 ஆண்டுகள் பழமையான அவரது பெண்டுலம் கடிகாரத்திற்கு தினமும் தவறாது சாவி குடுத்து  ஓடவைத்துக்கொண்டிருக்கிறார், தன் 72 வயதிலும். ஆனால், எனக்கோ இரண்டு வருடங்களாக நான் செய்து வரும் அன்றாட வேலைகளைச்  செய்யவே எனக்கு sticky notes தேவைப்படுகிறது. 

இத்தனைக்கும் அவர் படிக்கும் அத்தனை புத்தகங்களையும், நானும் படித்து பார்த்து விட்டேன், ஜோதிட நூல்களைத் தவிர. பெரிய புத்தகங்கள் எல்லாம் இல்லை, தமிழ் நாளிதல்களோடு வரும் பக்தி இணைப்புகள், செய்தித்தாள்கள், அவ்வப்போது நான் வாங்கும் கல்கி, சிறு இயற்கை வைத்திய குறிப்புகள் கொண்ட புத்தகங்கள்,  சென்ற வருடம் நான் வாங்கிக்கொடுத்த பகவத்கீதை, அவ்வளவே அவரின் கருவூலங்கள். சொல்லப்போனால், அவரை விட எனக்கு புத்தகம் படிக்க வாய்ப்புகளும் அதிகம், விரல் நுனியில் இணையமும் இருக்கிறது. என்னால் அவரைப்போல இருக்க முடியவில்லையே? எங்கே தடுமாறுகிறோம் நாம்?

உண்மையில், கூகுள்-ளிடம் நாம் தடுமாறிக்கொண்டிருகிறோம். ஒரு மணி நேரம் அவர்களிடம் இணைய உலகை ஒப்படைத்துப்பாருங்கள். கூகுள் ஏ அவர்களிடம் தடுமாறும். பாதம் தொட்டு வணங்குவோம், நம் வீட்டுப் பரணில் தூங்கும் சொக்காய்களின் சொந்தக்காரர்களை...!!

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பழைய ஃபேஷன்லாம் இப்ப திரும்பரதே? அதுவும் நல்லதுதானே?

      நீக்கு
  2. கண்டிப்பாங்க.. பேஷன் மட்டும் அல்ல, பழைய வாழ்க்கை முறைகளும் திரும்ப வரவேண்டும்..

    பதிலளிநீக்கு