புதன், அக்டோபர் 31, 2012

என் நாட்காட்டிக்கு ஒரு வேண்டுகோள்..

நைசாக  வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஆட்டுக்குட்டி..

அதை அண்டவிடாமல் துரத்தும் எங்கள் ரோமி..

அதற்காக ரோமியிடம் முறைத்துக்கொண்டிருக்கும் தாய் ஆடு..

உன் வாலை என்னிடம் ஆட்டு பார்ப்போம் என்று சவால் விடும் செந்நிற
                                                                                                                   இளமாட்டுக்கன்று..

தனது தாகத்தை ஊருக்கே உரைக்கும் எறுமை..

இது வெயில் காலம் என்று கூக்குரலிடும் ரோஜா செடிகள், மொட்டையாய்...

மறு ஓரம் செடி கொள்ளாத பூக்களுடன் ரோஜாச் செடிகளை ஏளனமாக
                                                                                                          பார்க்கும் சங் கு பூக்கள்..

போனால் போகிறதென்று பாதி மாம்பழத்தை மிச்சம் வைத்துவிட்டு
                                                                                         போயிருக்கும் கிளிக்கூட்டங்கள்..

கத்திரி வெயிலிலும் ஆர்பரிப்பாக குளித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் மதகு..

செங்குழை தள்ளியிருக்கும் கிழக்கு வேலி பார்த்த தென்னை மரம்..

பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க தவிக்கிறேன்..

எனதறுமை நாட்காட்டியே, என்று தான் எனக்கு வழி வகுப்பாய்..?!


புதன், செப்டம்பர் 05, 2012

இன்னமும் கத்துக்கனுமாம்..

கோபத்தைக் குறைக்க கத்துக்க, டிவி பார்க்கும் நேரத்தை குறைச்சுக்க, கண்டதெல்லாம் சாப்பிட்டு பழகாதே..
                                                                                                      - இது தாத்தா

சேலை கட்ட கத்துக்க, காலையில் நேரமே எழுந்து பழகிக்க, காசெல்லாம் கண்டபடி செலவு செய்யாதே..
                                                                                                     -இது பாட்டி

Sentiment-ஆ இல்லாம Practical-ஆ இருந்து பழகு, எதிர்த்து பேசறத விடு, ஒரு விஷயத்தை  நல்லா யோசிச்சு முடிவெடு..
                                                                                                  -இது அப்பா

நல்லா சமைக்க கத்துக்க, பொறுப்பா இருக்கனும், எப்ப பாரு மொபைல், லேப்டாப்’லயே இருக்காத..
                                                                                                  -இது அம்மா

Traffic-ல வேகமா வண்டி ஓட்ட கத்துக்க, NFS இன்னும் கொஞ்சம்  நல்லா விளையாட கத்துக்க..                                                   -இது தம்பி


ஸ்ஸ்ஸ்.. அப்பப்பபா.... 19 வருடம் கத்துக்கிட்டதை விட, இனிமேல் தான் நிறையயயயய கத்துக்கனும் போலிருக்கே....

குறிப்பு: இன்னும் 40 ஏ நாளில் என் கற்றல் வாழ்க்கை (19 வருட அத்யாயம்) முடியப்போகிறதே.. :)

புதன், ஆகஸ்ட் 15, 2012

என் செல்லத் தம்பிக்காக ஒரு பதிவு


சூரியப்பிரகாசம். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் என் செல்லத்தம்பி. வருகின்ற 18-ம் தேதியன்று 16-ம் பிறந்த நாள் அவனுக்கு.


1997, ஆகஸ்ட் மாதம், கிட்ட தட்ட 2 மாதங்கள் அம்மாவைப்பிரிந்து பாட்டியிடம் வளர்ந்த ஏக்கம், சூர்யா பிறந்து, 2 ம் நாள் மருத்துவமனையில் அம்மா மடியில் அவனைப்பார்த்த மாத்திரத்தில் அந்த ஏக்கம் பொறாமையாக உருமாறி அழுகையாய் வந்தது. என்னை விட தம்பி கலராய் இருக்கிறான் என்று கூடுதல் கடுப்பு வேறு. ஆனாலும் கூட, அவன் விக்கலுக்கு காரணமாய், அவன் சிரிப்புக்கு சொந்தகாரியாய், அவன் சேட்டைகளுக்கு ரசிகையாய், அழுகைக்கு தாலாட்டாய் மாறித்தான் போனேன். அவனுக்காக கற்றுக்கொண்ட தாலாட்டெல்லாம், அவன் நினைவுகளுடன் பசுமையாய் என்னுள் இன்னும் இருக்கிறது.

‘உங்கு குடிக்கறியா..
ஊறுகாயி திங்கறியா..
பாலு குடிக்கறியா..
பழைய சோறு திங்கறியா..”


 அப்பவும் அவன் அழுகை நிக்காமல் போக, பள்ளியில் பாடும் ‘prayer song' - ஐ எல்லாம் பாடி, சில சமயம் வென்றும், பல சமயம் தோற்றும் போயிறுக்கிறேன்.


அவன் பள்ளி செல்ல ஆரம்பிக்கையில், அவனுக்காக பென்சில் டப்பாவையும், வாட்டர் பாட்டிலையும் பார்த்து பார்த்து வாங்கிய நான், அவன் வளர்ந்த பின் பென்சில்களுக்கும் பேனாக்களுக்கும் சண்டை போட்டேன். அவனை மிரட்ட டைரியில் புகார்கள் எழுதியது, நான் மார்க் வாங்கிய அழகிற்கு அவன் படிப்பை குறை கூறியது என்று அவனது பள்ளிப்பருவத்தில் பெரிய மனுஷித்தனமாய் மாறிய நான், இன்று அவனது பெரிய மனுஷித்தனத்தில் குழந்தையாகவே மாறிப் போகிறேன்.
                                   
'அக்கா விடம் காசே இல்லை டா’ என்று பொய்யாக புலம்பினால் கூட, அவன் சேமிப்பைக் கொண்டு வந்து கொடுப்பதில் ஒரு தந்தையின் பரிவை உணர்ந்தேன்.

அல்சர் வலியில் துடித்த போது, ‘ஒழுங்காக் சாப்பிடு’ என்று திட்டியபோதும், அவன் சுட்டுத் தரும் தோசை, பனியாரங்களிலும், போட்டுத்தரும் பூஸ்ட்-டிலும், அக்காவிற்கு பிடிக்கும் என்று சேகரித்து வைத்திருக்கும் கொய்யாப்பழங்களிலும், சீத்தாப்பழங்களிலும் , அவன் வளர்த்துக்கொண்டிருக்கும் ரோஜா, செவ்வந்தி செடிகளிலும், எனக்கு வைத்து விட்ட மருதாணிகளிலும், தலைவலியின் போது பொட்டுவிட்ட தைலங்களிலும் ஒரு தாயின் அரவணைப்பை உணர்கிறேன்.

வீட்டிற்கு வந்திருக்கும் திருமண அழைப்பிதழ்களை குறிப்பிட்டு, ‘அக்காவிற்கு இதை விட சூப்பராக இருக்கவேண்டும்’ என்று சொல்லும் போதும், என் வேலையைப்பற்றி அம்மா பேசும் போதெல்லாம், ‘இவ்வளவு நாட்கள் விடுதியில், இப்போது வேலை வேலை என்றால், அக்காவை வீட்டில் வைத்திருக்கும் எண்ணமே இல்லையா?’ என்று வாதிடும் போதும் ஒரு அண்ணனின் அக்கறையை உணர்கிறேன்.

தூங்கும்போது தலை கோதி விடச்சொல்வதிலாகட்டும், குட்டி குட்டி தோசை சுட்டு குடுக்கச்சொல்வதிலாகட்டும், சாப்பாடு ஊட்டி விடுவதிலாகட்டும், சண்டை பொட்டுக்கொல்வதிலாகட்டும்.. இன்னும் என் சுட்டித் தம்பியாகவும் இருக்கிறான்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் இரவுகளில், வாசலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டே தொடங்கும் எங்களின் கனவு உலகம். அவன் படிப்பிலிருந்து, எனக்கு கிடைக்கப்போகும் வேலை, அப்பாவின் கோபம், அம்மாவின் ருசியான உணவு, ஆத்தாவிடம் பொட்ட சண்டை, அய்யா விடம் வாங்கிய திட்டு, அவன் சைக்கிளில் செய்த சாகசம், புதிதாக வந்திருக்கும் செல்போன், அவனைக் கவர்ந்த விளம்பரங்கள், புதிதாக வந்திருக்கும் திரைப்படங்கள், செய்தித்தாள்களில்ருந்து வெட்டி எடுத்த புது மாடல் கார்கள், எங்கள் சுற்றுலா ஆசைகள், வாங்க ஆசைப்படும் பொருட்கள் வரை பேச பேச ஆயிரம் கனவுகள், லட்சியங்கள் என்று எங்கள் நட்சத்திர உலகம் விரிந்து கொண்டே போகும்.

                                             

அவனது கனவுகள் கை கூடவும், மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், வானம் வசப்படவும், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்..
அன்பு அக்கா,
ரஞ்சனி.


My last year's birthday wishes to Surya,


வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

ஈரமான நினைவுகளுடன் நான்..

ஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவை மேலும் விரட்டி, அம்மாயி வீட்டிற்கு பொழுது சாயத்தொடங்கும் வேளையில் நுழைகையில், உள்-வாசலில், விறகு அடுப்பில், இரும்பு சட்டியில், பருப்பு வடையும், கச்சாயமும் மணந்து கொண்டிருக்கும். அதற்குப்பின், பெரியம்மா, சித்தி, தங்கச்சி, தம்பிகள், அண்ணன்கள் வந்து சேர உள்-வாசல் களைகட்டியிருக்கும். சூட்டொடு சூட்டாக வடையும், கச்சாயமும் சாப்பிட்டு முடித்தவுடன், டிவி. டிவிக்கும், வீடியோ கேமிற்கும் ரகளையே நடக்க, இறுதியில், பொய்யான வாக்குறுதிக்காகவும், அதிகஅப்படியான புகழ்ச்சிக்காகவும், டிவியே ஜெயித்திருக்கும். (அரசியல்வாதிகள் ரெஞ்சிற்கு இறங்கிவிட்டோமோ?!)

டிவி அலரும் சத்தம் கேட்டவுடன், திட்டு கிடைக்கும். ‘இங்க வந்து பேசிட்டு இருக்கலாம்’ல, அந்த டிவி ல அப்படி என்ன தான் இருக்கு?’ என்று. என்ன இருக்குனு சத்யமா சொல்லத்தெரியலங்க. டிவி அது பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்க, எனக்கும் ஒரு வருடமே இளையவளான என் தங்கைக்கும் பேச ஆயிரம் கதைகள் இருக்கும். அந்த  நேரத்தில் சாப்பாடு கூட மறந்துபோயிருக்கும். அம்மாக்கள் கூட்டம் திண்ணையில் இடம் பிடித்து பேசிக்கொண்டிருக்க, குட்டீஸ்கள் ஒரு மூலையில் விளையாடிக்கொண்டிருக்க, அம்மாயி மட்டும் கூடிய வரை அனைவரையும் சாப்பிட அழைக்க முயன்று தோற்றுக்கொண்டிருப்பார்.

                                   
அடுத்த நாள் காலை 8 மணி விழிப்பு, எழுந்ததும் குளிக்கச்சொல்வதை காதிலே வாங்காமல் நாள் முழுக்கத்திரிவது, கோவிலுக்கு போகச்சொல்லியதை கேட்டதே கிடையாது. காலையில் திண்ணையில் பந்தி போட்டுக்கொண்டு சாப்பிட்டது, பிடிக்கவே பிடிக்காத இட்லியை கணக்கில்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு சாப்பிட்டது, திட்டு வாங்கிக்கொண்டு டிவி பார்த்தது, எங்கள் அக்கா-தங்கை பாசம் தான் பெரியது என்று அம்மாக்களிடம் வாதிட்டது, அம்மா, சித்தி, பெரியம்மா, அம்மாயி என்று அனைவரின் கைப்பக்குவத்தில் செய்த மதிய விருந்து, கோவிலுக்கு போய்விட்டு வந்து அப்பச்சி பிரசாதம் குடுக்கையில் ”என்னடா, இத்தனை பேர் இருக்கிங்க, கோவிலுக்கு வந்திருக்களாம்’ல?”என்று திட்டாமல் திட்டுவது, அன்று, புதிதாய் ரிலீஸ் ஆகியிருந்தது விஜய் படமாகவே(!) இருந்தாலும், அன்று இரவுக் காட்சிக்கு 3, 4 வண்டிகளில் போய்விட்டு வந்த கொடுமுடி KPS தியேட்டர், பின், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அவரவர் வீட்டிற்கும், பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லக்கிளம்பியது... அடுத்த ஆடி - 18 வரும் வரை திகட்டாத நினைவுகள்!!

ஆனால், இந்த வருடம்? பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரியின் விடுதியில்!
பக்கத்திலிருந்து சொல்வதற்கு அம்மாயியும் இல்லை, திட்டுவதற்கு அப்பச்சியும் இல்லை. கைபேசியில் பேசும் போது, ’அடுத்து தீபாவளிக்கு வந்து விடலாம்’, என்று அவர்கள் சொன்ன சமாதானங்கள் எல்லாம் என் புத்திக்கு உரைக்கவே இல்லை. அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, கோவிலுக்கு சென்றுவந்து, அம்மா விடம் கைபேசியில் பேசிய போது, எனக்கே ஆச்சர்யம்! நானா இப்படி?! :)


அன்றைக்கு எனக்கு பிடித்த நூடில்ஸ் தான் காலை உணவு என்றாலும், பிடிக்காத இட்லி யையே எதிர்பார்த்தது என் மனம். எப்பொதும் போல வகுப்பில் அரட்டையும், கச்சேரியும் அன்று அதிகமே என்றாலும், மனம் பருத்திக்கொட்டாம்பாளையத்திலேயே இருந்தது. குறுந்தகவல்கள் அனுப்பியும் பதில் அனுப்பாமல் இருந்த தங்கையின் மீது பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. முதல் நாள் இரவு கைபேசியில் பேசும் போது வந்த இரைச்சலும், நானே கற்பனை செய்து கொண்ட வடையின் மணம் வேறு நினைவில் வந்து கடுப்பேற்றியது, சுமார் 2,500 மைல் தொலைவில் இருந்து வந்திருந்த தம்பியையும், 105 - ஏ மைல் தொலைவில் இருந்தும் வர முடியாமல் போன என்னையும் எண்ணி ஆற்றாமையில் உறைந்தேன்.

நிழலின் அருமை வெயிலின்போது தான் தெரியும்’ என்பதை முழுதாய் உணர்கிறேன், இன்று!



வெள்ளி, ஜூலை 20, 2012

எனது கல்லூரியின் கடைசி பக்கங்கள்


19 வருட கல்வி வாழ்க்கை முடிவிற்கு வரப்போகும் தருணம் வெகு அருகில். 2 மாதங்கள் சிட்டாய் பறந்து விடும். அதற்குப்பின் வரும் 4 மாதங்கள் ஆய்வறிக்கை சமர்ப்பணங்களிலுமே ஓடிவிடும். கல்லூரியும் பள்ளியும் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை இனி யார் கற்றுக்கொடுக்கப்போகிறார்கள்?

இது தான் தைரியம் என்று கற்றுக்கொடுத்த எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தைரியத்துடன் வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வகுத்துக்கொடுத்த வேளாளர் மகளிர் கல்லூரி, எனது பிரகாசமான வாழ்கைக்கு வழி வகுத்துக்கொடுக்கும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி.. விரலைப்பிடித்தும் தலையில் குட்டியும் என் வாழ்க்கைப்பயணத்தில் என்னுடன் வந்த ஆசான்கள், என்னை வழிநடத்திச்சென்ற நல்ல மேய்ப்பாளர்கள்.

எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி பக்கத்தில் இருக்கிறேன் நான். ஒரு சிறிய ஆனால் நிறைய கற்றுக்கொடுத்த ஒரு மகளிர் கல்லூரியிலிருந்து வந்து, இரு பாலர் சேர்ந்து படிக்கும் ஒரு பிரபலமான பொரியியல் கல்லூரியில் சேர்ந்த போது மிரண்டு தான் போனேன். என் பழைய கல்லூரியில் காணாத, கேட்டேயிராத புதிய புதிய விதிமுறைகள். மகளிர் கல்லூரியில் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனக்கு, சக மாணவர்கள் எல்லாரும் லிங்குசாமி பட வில்லன்கள் போலத்தெரிந்தனர். நாளடைவில், வெகுவிரைவில் பழகித்தான் போனேன். வகுப்பில் பரிச்சயம் ஆகாதவர்கள் கூட Facebook-கிலும், Google+ - சிலும் பரிச்சயமாயினர்.

எங்க college

எங்க department
                                   
எங்க hostel

உருகி உருகி கதை கதை யாய் பேசி பழகிய நட்பு, பார்த்து பார்த்து அலங்கரித்த விடுதி அறை, வழி நெடுக கொட்டிக்கிடக்கும் குல்மோஹர் பூக்கள், பொறாமைப்பட வைக்கும் கல்லூரி சேர்மேனது கார் (Skoda - Superb), ஒன் றுமே புரியாமல் பக்கம் பக்கமாய் எழுதப்பட்டிருக்கும் 7 subject notebook, எப்போது வரும் என்று ரஜினி படம் போல எதிர்பார்ப்பை அதிகரிக்கும் GP (a) General Permission, பிடிக்கவே பிடிக்காத ஹொஸ்டல் இட்லி, மிகவும் பிடித்த நூடில்ஸ், அவ்வப்போது அறையில் திருட்டுதனமாய் செய்த சமையல், காலை நடையின் போது துரத்தி விளையாடும் நாய்க்குட்டி (மணிமேகலை ?! ), மூச்சிரைக்க விளையாடும் shuttle court, என்னை கோல் போட வைத்து அழகு பார்த்த basket ball court, தீபாவளி போல 3 நாள் வந்து கலக்கி விட்டு போகும் ‘Futura', வாமிட் வருகிறது என்று கட் அடித்த நாட்கள், கல்யாண வீட்டின் ஒரு மூலையில் நின்று கொண்டு ‘பாட்டி இறந்து விட்டார், லீவ் வேண்டும்’ என்று ராவாக அடித்து விட்ட பொய்கள், சுத்தமாகவே புரியாமல் 5 மார்க்குகாக எடுத்து விட்ட செமினார்கள், தண்ணீர் வரவில்லை, மெஸ்-ல் சாப்பாடு தீர்ந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாக பொய் சொல்லி விட்டு கட் அடித்தது, LAN - ல் ரமணி சந்திரன், கல்கி, Chetan Bhagat  நாவல்களை பதிவிரக்கம் செய்து வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாய் படிப்பது, ஒவ்வொரு பரீச்சை முடிந்தும் எங்கள் விரிவுரையாலர்கள் பேஸ்புக்-கில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து கமெண்ட் போட்டு விட்டு, பின் அவர்களிடம் அசடுவழிவது.... அட.. !! வாழ்க்கை இவ்வளவு அழகானதா?

ஒரே கலரில் ஆடை அணிந்து வந்தால் ‘Same sweet', புத்தாடை அணிந்து வந்தால் ‘New pinch', ஆடை நிறத்திற்கு மெட்ச் ஆகவே தேர்ந்தெடுத்துக்குடிக்கும் தெனீர்க்கோப்பை, வகுப்பு நடக்கும் வேளையில் ஏதாவது ஒரு பாடலில் நடு வரியை சொல்லி, முதல் வரியைக் கண்டுபிடித்து விளையாடுவது, கலர் கலராய் அழி ரப்பர் கள், பொம்மை பேனாக்கள், பல கடிகள் வாங்கிய  நெல்லிக்காய், chocobar, லாலிபாப்,எலந்த வடை, கொய்யா, மாங் காய், ஒவ்வொரு கவுண்டரிலும் ஒவ்வொரு அப்பளம் வீதம் 3 * 1 =3 (+1 complimented by friends ), ஆக மொத்தம் அசால்டாக 4 அப்பளங்கள் சாப்பிட்டது என்று குழந்தைத்தனமாக வாழ்ந்த் வாழ்க்கை முடியப்போகிறதா?


முதல் வருடத்தில் இருந்த ஒரு பக்கா professional engineering வகுப்புகளை, மூன்றாம் வருடத்தில் கலைக்கல்லூரிகளினும் மிஞ்சிய கொண்டாட்டமாக மாற்றிய பெருமை எல்லாம் எங்களையே சேரும்.வகுப்பிற்கே உல்லன் நூலும், ஊசியும் கொண்டு வந்து பின்னுவதாகட்டும், வகுப்புகளில்  Sidney Sheldon , Chetan Bhagat நாவல்கள் படிப்பதாகட்டும், லேப்-ல் கல்கி, ரமணி சந்திரன் நாவல்கள் படிப்பதாகட்டும், ரங்கோலி, மெஹந்தி போடுவதாகட்டும்.. கல்லூரி வாழ்க்கையை இவ்வளவு அழகாய் எவரால் அலங்கரித்திருக்க முடியும்?


படிப்பிலும் சோடை பொய் விடவில்லை நாங்கள். விளையாட்டாய் படித்து அசால்ட்டாய் மதிப்பெண்கள் எடுப்போம். Chetan Bhagat சொல்லும் ‘Five point someone' கள் அல்ல நாங்கள்,  ‘Eight point all ones" !





பொய் சொல்வதில் கற்றுக்கொண்ட creativity, வகுப்பும் கவனித்துக்கொண்டு SMS-ம் அனுப்பிக்கொண்டு உல்லன் நூலில் பிண்ணிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டு சமாளித்த போது multi-tasking, பீட்டர் விடுவதில் கற்றுக்கொண்ட corporate-english, periodicals கற்றுக்கொடுத்த just-like-that பாலிசி, செமெஸ்டர்-ன் போது பழகிய hard-work, பத்தே நிமிடத்தில் எழுதிய assignment - ம், ஒரே நாளில் முடித்த record-களும் சொல்லுமே Intel i7 - னொடு போட்டி போட்ட எங்கள் வேகத்தை...... இனி இந்த வாழ்க்கைப் பாடங்களை யார் கொடுக்கப் போகிறார்கள்?!!

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரிக்கும், என் வாழ்க்கைப் பக்கங்களை அழகாக்கிய என் நண்பர்களுக்கும் சிறப்பு சமர்ப்பணங்கள். :)


புதன், ஜூலை 04, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2


திண்பண்டங்களும் தீனிப்பண்டாரங்களும்


Sunfeast - Dark Fantasy, Cadbury - Oreo, Britannia - Good day ஆகியவற்றின் ராயல் சுவையில் லயித்திருக்கிறோம் நாம். தினம் தினம் புதிது புதிதான  flavour-ரோடும், விளம்பர உத்தியோடும், தித்திக்கும் சுவையோடும், பளபளக்கும் உரையோடும் வரும் தின்பண்டங்களுக்கு தான் இன்றைக்கெல்லாம் மவுசு. 3 ரூபாய் Parle-G,  5 ரூபாய் Horlicks biscuit,  10 ரூபாய் krack-jack 
சுவையை மறக்க முடியுமா என்ன?!

சக்திமான் ஸ்டிக்கர் காகவே வாங்கித் தின்று தீர்த்த Parle-G, World Cup என்றால்  என்னவென்றே தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு ரன்கள் சேகரித்த Britannia பாக்கெட்டுகள், அப்போது வந்த திருடன்-போலீஸ் விளம்பரத்திற்காகவே வாங்கிய krack-jack, பெப்பெர்மின்ட், லாலி பாப், சவ்வு மிட்டாய், இஞ்சி மரப்பான்.. தித்திக்கும் திகட்டாத நினைவுகள் .. :)
பிஸ்கட், மிட்டாய்கலோடு மட்டுமே நின்று விடுமா எங்கள் கிளிஞ்சல், மயிலிறகு காலங்கள்..??

வீட்டிலிருந்து திருட்டுத்தனமாய் எடுத்து வந்த புளியுடன், மிளகாயும், உப்பும் வைத்து அம்மிக் கல்லில் கொட்டி, ஈர்க்கு மாற்று குச்சியில் சொருகி சப்புக்கொட்டிய புளி லாலி பாப், இடித்த புளியை கொய்யா மர இலையில்  வைத்து சாப்பிட்ட புளி வெற்றிலை,  பொட்டுக் கடலையும் சர்க்கரையும் வைத்து அரைத்து விக்கி விக்கி சாப்பிட்டது, பொறியுடன் நாட்டு சர்க்கரையும் தேங்காயும் கலந்து சாப்பிட்டது, வாழைப்பழத்தை சக்கரம் சக்கரமாக வெட்டி நடுவில் நாட்டு சக்கரையை கிரீம் ஆகவும் வைத்து, நிலக்கடலையை ட்ஸ் ஆகவும் வைத்து சாப்பிட்டது, ரஸ்னா-வை எவர் சில்வர் டம்லரில் ஊற்றி நடுவே ஒரு குச்சியை பொட்டு Freezer-இல் வைத்து ஐஸ் செய்தது ( 2 ரூபாய் ஐஸ் செலவை மிச்சம் செய்யப் போய், வீட்டில் பாதி சர்க்கரை காணாமல் போன கதை வேறு ), நெல்லிக்காயையும், மாங்காயையும் துண்டு துண்டாய் நறுக்கி, மிகாய்ப்பொடி கரைத்த தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது, வெள்ளரி பீஞ்சினை முக்கால் பாகமாக வெட்டி உள்ளே இருப்பவைகளை குடைந்து எடுத்து விட்டு, உள்ளே நுங்கு, மாதுளை முத்துக்களை நிரப்பி, கோன் ஐஸ் சாப்பிட்டது.. Creative ஆகவும், Decorative ஆகவும் எத்தனை ரெசிபிகள்..!! வாரமலர் சமையல் குறிப்புகளும், DD1 ல் வரும் வசந்த் & கோ வின் ‘சாப்பிடலாம் வாங்க’ வில் கற்றுக்கொண்ட அரைகுறை சமையலும் போதாதா..?

ஒவ்வொரு காலத்திற்கும் தினுசு தினுசாய் தின்பண்டங்கள் வாரி வழங்கிய பெருமை பனை மரங்களுக்கே உண்டு. கண், மூக்கு, முகம், சட்டை என்று அப்பிக்கொண்டு உரிஞ்சிய நுங்கு, பனை ஓலையில் வாங்கிக் குடித்த தெழுகு, அப்படியே சாப்பிட்ட பனம் பழம், கரையான் புற்றுகளிலும், கல்லிடுக்குகளிலும் தேடிப் பொறுக்கி வெட்டி சாப்பிட்ட பனங்கொட்டை, நெருப்பில் சுட்டும், அடுப்பில் வெக வைத்தும் ருசித்த பனங்கிழங்கு.. தின்பண்டங்களுக்கு மட்டும் பஞ்சமே இருந்ததில்லை.
ஓடையோரம் நெல்லிமரம், மதகோரம் கொய்யா மரம், கிணற்று மேட்டு மாமரம், வயல் பொலி ஓரம் சீதாப்பழமரம், ரோட்டொரம் சப்போட்டா மரம், பக்கத்து வீட்டு கொலுமிச்சை மரம்.. பசியைத் தீர்க்க வழியா இல்லை எங்கள் கோரக்காட்டுப்புதூரில்...??!!



செவ்வாய், ஜூன் 12, 2012

பெண்மையும் சமூகப் பரிணாமங்களும்

பெண்மை. கடவுளுக்குத் தலை வணங்காதவர்கள் கூட மரியாதையுடன் கை கூப்ப வைக்கும் சக்தி பெண்மைக்கே உண்டு. மனித நாகரிகம் வளர வளர, பெண்மைக்கான கண்ணோட்டங்களும் மாறியே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த கண்ணோட்டங்கள் நான்கு விதமான பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.

  • கடவுளாக கொண்டாடிய காலம் (ஆதி காலம்)
  • அடிமைகளாக நடத்திய காலம் (1980 வரை)
  • போகப்பொருளாய் பார்த்த காலம் (1980 லிருந்து இன்றும், நாளையும் கூட)
  • இழிவுப்போருளாக சித்தரித்த காலம் (2000 லிருந்து, இன்றும், என்று வரையோ?!)
ஆதி காலத்தில், மனித நாகரிகம் வளர்வதற்கு முன், ஒரு குட்டி மனிதனையே உருவாக்கும் அபூர்வ  சக்தியினை பெண் பெற்றிருந்தமையால், அவள் தெய்வமாகவும், தெய்வத்தினும் மிஞ்சிய சக்தியாகவும் போற்றப்பட்டாள். "நானும் உங்களுள் ஒருத்தி" என்று பெண் புரிய வைக்க முற்பட்டு, அதன் விளைவாக, தோளுக்கு தோளாய் நிற்க வேண்டியவள், ஆண் சமூகத்தின் காலடியில் கிடத்தப்பட் டாள்.
அன்றிலிருந்து ஆணிற்கு சேவகம் செய்வதற்கென்றே வாக்கப் பட்டவள் பெண் என்ற மிதர்ப்பில் ஆண் சமூகம் பெண்களை எள்ளி நகையாடியது. "மகாத்மா" என்று போற்றப்பட்டவர் கூட இதற்கு விதி விலக்கல்ல. பெண்களின் உடல் நலத்திற்காக போடப்பட்ட மலர் படுக்கைகள் யாவும் முட்படுக்கைகளாகவும், கோர மலைப்பாம்புகளாகவும் மாறி, கழுத்தை இறுக்கி, உடலளவிலும் மனதளவிலும் பெண்ணை பலமற்றவளாக மாற்றி இந்த சமுதாயம் அவளை அழகு பார்த்தது. ஆக, சமுதாயத்தில் மிகவும் நலிவற்றவர்கள் என்ற முட்கிரீடம் சூட்டப்பட்டவர்களாக பெண்மை நடத்தப்பட்டது.



அடுத்து, பெண்மையை போகப்பொருளாக சித்தரித்த காலம். இது என்று தொடங்கியது என்றே தெரியவில்லை. ஆலிங்கன சிற்பங்களிலும், அரசனின் அந்தப்புரங்களிலும் தொடங்கிய இந்த பரிணாம வளர்ச்சி, இன்று எங்கெங்கோ தொடருகிறது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் எங்கோ ஒரு ஓரத்தில் புதைந்து கிடந்தவைகள், இன்று எல்லாத் திரைப்படங்களில், ஏன், விளம்பரங்களில் கூட வெளிப்படையாகவே பெண்மை மிகக்கேவலமாக சித்தரிக்கப்படுகிறது .
குத்துப்பாடல்கள், ஆபாச சுவரொட்டிகள், இரட்டை அர்த்த வசனங்களை மீறி, இன்று புதிதாக ஒரு பாணியை 'கலை' உலகத்தினர் கடைபிடிக்கின்றனர். பெண்களைக் கேவலப்படுத்தி, அவர்களை 'காதலில் ஏமாற்றுபவர்கள்' என்று பட்டம் கட்டி, தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மதியாமல், மறந்து பாடித்திரிகின்றனர்.
பெண்களைத்திட்டி ஒரு பாடல் இருந்தால், அதுவே போதும் படம் வெற்றி  பெற்று விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் படக்குழுவினர் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

பெண்களின் கொடுமைகளை ஊருக்கு உரைக்கிறேன் என்ற பெயரில் காதலில் வாழ்க்கையை தொலைத்தவர்கள், கொடுமைக்கார கணவனிடம் சிக்கி கரை ஏற முடியாமல் தவிப்பவர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் என்று பெண்மையின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதையும் வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்யத்துடிக்கின்றனர்.  பெண்மை அல்லலில் சிக்கி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்  விளம்பர இடைவேளையில் தான், "அடிடா அவள, வேட் றா அவள ..", "எவண்டி உன்ன பெத்தான், கைல கெடைச்ச செத்தான்..", "வொய் திஸ் கொலவெறி  டீ.." என்று குடித்துவிட்டு பாடித்திரிகின்றனர். பெண்மையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்களே வா? ஆணாதிக்கமா? ஆணாதிக்க சமுதாயமா? எவற்றை கூறுவது.. எவற்றை விட்டுத்தள்ளுவது..??

நாளைய சமுதாயத்தில், ஏன் இன்றைய சமுதாயத்திலே கூட, எங்கள் சகோதரர்களின் பார்வையில் பெண்மை எப்படி இருக்கும் என்ற பதை பதைப்புடனும் , பயத்துடனும், மனதில் கனத்துடனும் முடிக்கத் தெரியாமல் முடிக்கிறேன்......