வெள்ளி, ஜூலை 20, 2012

எனது கல்லூரியின் கடைசி பக்கங்கள்


19 வருட கல்வி வாழ்க்கை முடிவிற்கு வரப்போகும் தருணம் வெகு அருகில். 2 மாதங்கள் சிட்டாய் பறந்து விடும். அதற்குப்பின் வரும் 4 மாதங்கள் ஆய்வறிக்கை சமர்ப்பணங்களிலுமே ஓடிவிடும். கல்லூரியும் பள்ளியும் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை இனி யார் கற்றுக்கொடுக்கப்போகிறார்கள்?

இது தான் தைரியம் என்று கற்றுக்கொடுத்த எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தைரியத்துடன் வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வகுத்துக்கொடுத்த வேளாளர் மகளிர் கல்லூரி, எனது பிரகாசமான வாழ்கைக்கு வழி வகுத்துக்கொடுக்கும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி.. விரலைப்பிடித்தும் தலையில் குட்டியும் என் வாழ்க்கைப்பயணத்தில் என்னுடன் வந்த ஆசான்கள், என்னை வழிநடத்திச்சென்ற நல்ல மேய்ப்பாளர்கள்.

எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி பக்கத்தில் இருக்கிறேன் நான். ஒரு சிறிய ஆனால் நிறைய கற்றுக்கொடுத்த ஒரு மகளிர் கல்லூரியிலிருந்து வந்து, இரு பாலர் சேர்ந்து படிக்கும் ஒரு பிரபலமான பொரியியல் கல்லூரியில் சேர்ந்த போது மிரண்டு தான் போனேன். என் பழைய கல்லூரியில் காணாத, கேட்டேயிராத புதிய புதிய விதிமுறைகள். மகளிர் கல்லூரியில் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனக்கு, சக மாணவர்கள் எல்லாரும் லிங்குசாமி பட வில்லன்கள் போலத்தெரிந்தனர். நாளடைவில், வெகுவிரைவில் பழகித்தான் போனேன். வகுப்பில் பரிச்சயம் ஆகாதவர்கள் கூட Facebook-கிலும், Google+ - சிலும் பரிச்சயமாயினர்.

எங்க college

எங்க department
                                   
எங்க hostel

உருகி உருகி கதை கதை யாய் பேசி பழகிய நட்பு, பார்த்து பார்த்து அலங்கரித்த விடுதி அறை, வழி நெடுக கொட்டிக்கிடக்கும் குல்மோஹர் பூக்கள், பொறாமைப்பட வைக்கும் கல்லூரி சேர்மேனது கார் (Skoda - Superb), ஒன் றுமே புரியாமல் பக்கம் பக்கமாய் எழுதப்பட்டிருக்கும் 7 subject notebook, எப்போது வரும் என்று ரஜினி படம் போல எதிர்பார்ப்பை அதிகரிக்கும் GP (a) General Permission, பிடிக்கவே பிடிக்காத ஹொஸ்டல் இட்லி, மிகவும் பிடித்த நூடில்ஸ், அவ்வப்போது அறையில் திருட்டுதனமாய் செய்த சமையல், காலை நடையின் போது துரத்தி விளையாடும் நாய்க்குட்டி (மணிமேகலை ?! ), மூச்சிரைக்க விளையாடும் shuttle court, என்னை கோல் போட வைத்து அழகு பார்த்த basket ball court, தீபாவளி போல 3 நாள் வந்து கலக்கி விட்டு போகும் ‘Futura', வாமிட் வருகிறது என்று கட் அடித்த நாட்கள், கல்யாண வீட்டின் ஒரு மூலையில் நின்று கொண்டு ‘பாட்டி இறந்து விட்டார், லீவ் வேண்டும்’ என்று ராவாக அடித்து விட்ட பொய்கள், சுத்தமாகவே புரியாமல் 5 மார்க்குகாக எடுத்து விட்ட செமினார்கள், தண்ணீர் வரவில்லை, மெஸ்-ல் சாப்பாடு தீர்ந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாக பொய் சொல்லி விட்டு கட் அடித்தது, LAN - ல் ரமணி சந்திரன், கல்கி, Chetan Bhagat  நாவல்களை பதிவிரக்கம் செய்து வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாய் படிப்பது, ஒவ்வொரு பரீச்சை முடிந்தும் எங்கள் விரிவுரையாலர்கள் பேஸ்புக்-கில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து கமெண்ட் போட்டு விட்டு, பின் அவர்களிடம் அசடுவழிவது.... அட.. !! வாழ்க்கை இவ்வளவு அழகானதா?

ஒரே கலரில் ஆடை அணிந்து வந்தால் ‘Same sweet', புத்தாடை அணிந்து வந்தால் ‘New pinch', ஆடை நிறத்திற்கு மெட்ச் ஆகவே தேர்ந்தெடுத்துக்குடிக்கும் தெனீர்க்கோப்பை, வகுப்பு நடக்கும் வேளையில் ஏதாவது ஒரு பாடலில் நடு வரியை சொல்லி, முதல் வரியைக் கண்டுபிடித்து விளையாடுவது, கலர் கலராய் அழி ரப்பர் கள், பொம்மை பேனாக்கள், பல கடிகள் வாங்கிய  நெல்லிக்காய், chocobar, லாலிபாப்,எலந்த வடை, கொய்யா, மாங் காய், ஒவ்வொரு கவுண்டரிலும் ஒவ்வொரு அப்பளம் வீதம் 3 * 1 =3 (+1 complimented by friends ), ஆக மொத்தம் அசால்டாக 4 அப்பளங்கள் சாப்பிட்டது என்று குழந்தைத்தனமாக வாழ்ந்த் வாழ்க்கை முடியப்போகிறதா?


முதல் வருடத்தில் இருந்த ஒரு பக்கா professional engineering வகுப்புகளை, மூன்றாம் வருடத்தில் கலைக்கல்லூரிகளினும் மிஞ்சிய கொண்டாட்டமாக மாற்றிய பெருமை எல்லாம் எங்களையே சேரும்.வகுப்பிற்கே உல்லன் நூலும், ஊசியும் கொண்டு வந்து பின்னுவதாகட்டும், வகுப்புகளில்  Sidney Sheldon , Chetan Bhagat நாவல்கள் படிப்பதாகட்டும், லேப்-ல் கல்கி, ரமணி சந்திரன் நாவல்கள் படிப்பதாகட்டும், ரங்கோலி, மெஹந்தி போடுவதாகட்டும்.. கல்லூரி வாழ்க்கையை இவ்வளவு அழகாய் எவரால் அலங்கரித்திருக்க முடியும்?


படிப்பிலும் சோடை பொய் விடவில்லை நாங்கள். விளையாட்டாய் படித்து அசால்ட்டாய் மதிப்பெண்கள் எடுப்போம். Chetan Bhagat சொல்லும் ‘Five point someone' கள் அல்ல நாங்கள்,  ‘Eight point all ones" !





பொய் சொல்வதில் கற்றுக்கொண்ட creativity, வகுப்பும் கவனித்துக்கொண்டு SMS-ம் அனுப்பிக்கொண்டு உல்லன் நூலில் பிண்ணிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டு சமாளித்த போது multi-tasking, பீட்டர் விடுவதில் கற்றுக்கொண்ட corporate-english, periodicals கற்றுக்கொடுத்த just-like-that பாலிசி, செமெஸ்டர்-ன் போது பழகிய hard-work, பத்தே நிமிடத்தில் எழுதிய assignment - ம், ஒரே நாளில் முடித்த record-களும் சொல்லுமே Intel i7 - னொடு போட்டி போட்ட எங்கள் வேகத்தை...... இனி இந்த வாழ்க்கைப் பாடங்களை யார் கொடுக்கப் போகிறார்கள்?!!

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரிக்கும், என் வாழ்க்கைப் பக்கங்களை அழகாக்கிய என் நண்பர்களுக்கும் சிறப்பு சமர்ப்பணங்கள். :)


புதன், ஜூலை 04, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2


திண்பண்டங்களும் தீனிப்பண்டாரங்களும்


Sunfeast - Dark Fantasy, Cadbury - Oreo, Britannia - Good day ஆகியவற்றின் ராயல் சுவையில் லயித்திருக்கிறோம் நாம். தினம் தினம் புதிது புதிதான  flavour-ரோடும், விளம்பர உத்தியோடும், தித்திக்கும் சுவையோடும், பளபளக்கும் உரையோடும் வரும் தின்பண்டங்களுக்கு தான் இன்றைக்கெல்லாம் மவுசு. 3 ரூபாய் Parle-G,  5 ரூபாய் Horlicks biscuit,  10 ரூபாய் krack-jack 
சுவையை மறக்க முடியுமா என்ன?!

சக்திமான் ஸ்டிக்கர் காகவே வாங்கித் தின்று தீர்த்த Parle-G, World Cup என்றால்  என்னவென்றே தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு ரன்கள் சேகரித்த Britannia பாக்கெட்டுகள், அப்போது வந்த திருடன்-போலீஸ் விளம்பரத்திற்காகவே வாங்கிய krack-jack, பெப்பெர்மின்ட், லாலி பாப், சவ்வு மிட்டாய், இஞ்சி மரப்பான்.. தித்திக்கும் திகட்டாத நினைவுகள் .. :)
பிஸ்கட், மிட்டாய்கலோடு மட்டுமே நின்று விடுமா எங்கள் கிளிஞ்சல், மயிலிறகு காலங்கள்..??

வீட்டிலிருந்து திருட்டுத்தனமாய் எடுத்து வந்த புளியுடன், மிளகாயும், உப்பும் வைத்து அம்மிக் கல்லில் கொட்டி, ஈர்க்கு மாற்று குச்சியில் சொருகி சப்புக்கொட்டிய புளி லாலி பாப், இடித்த புளியை கொய்யா மர இலையில்  வைத்து சாப்பிட்ட புளி வெற்றிலை,  பொட்டுக் கடலையும் சர்க்கரையும் வைத்து அரைத்து விக்கி விக்கி சாப்பிட்டது, பொறியுடன் நாட்டு சர்க்கரையும் தேங்காயும் கலந்து சாப்பிட்டது, வாழைப்பழத்தை சக்கரம் சக்கரமாக வெட்டி நடுவில் நாட்டு சக்கரையை கிரீம் ஆகவும் வைத்து, நிலக்கடலையை ட்ஸ் ஆகவும் வைத்து சாப்பிட்டது, ரஸ்னா-வை எவர் சில்வர் டம்லரில் ஊற்றி நடுவே ஒரு குச்சியை பொட்டு Freezer-இல் வைத்து ஐஸ் செய்தது ( 2 ரூபாய் ஐஸ் செலவை மிச்சம் செய்யப் போய், வீட்டில் பாதி சர்க்கரை காணாமல் போன கதை வேறு ), நெல்லிக்காயையும், மாங்காயையும் துண்டு துண்டாய் நறுக்கி, மிகாய்ப்பொடி கரைத்த தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது, வெள்ளரி பீஞ்சினை முக்கால் பாகமாக வெட்டி உள்ளே இருப்பவைகளை குடைந்து எடுத்து விட்டு, உள்ளே நுங்கு, மாதுளை முத்துக்களை நிரப்பி, கோன் ஐஸ் சாப்பிட்டது.. Creative ஆகவும், Decorative ஆகவும் எத்தனை ரெசிபிகள்..!! வாரமலர் சமையல் குறிப்புகளும், DD1 ல் வரும் வசந்த் & கோ வின் ‘சாப்பிடலாம் வாங்க’ வில் கற்றுக்கொண்ட அரைகுறை சமையலும் போதாதா..?

ஒவ்வொரு காலத்திற்கும் தினுசு தினுசாய் தின்பண்டங்கள் வாரி வழங்கிய பெருமை பனை மரங்களுக்கே உண்டு. கண், மூக்கு, முகம், சட்டை என்று அப்பிக்கொண்டு உரிஞ்சிய நுங்கு, பனை ஓலையில் வாங்கிக் குடித்த தெழுகு, அப்படியே சாப்பிட்ட பனம் பழம், கரையான் புற்றுகளிலும், கல்லிடுக்குகளிலும் தேடிப் பொறுக்கி வெட்டி சாப்பிட்ட பனங்கொட்டை, நெருப்பில் சுட்டும், அடுப்பில் வெக வைத்தும் ருசித்த பனங்கிழங்கு.. தின்பண்டங்களுக்கு மட்டும் பஞ்சமே இருந்ததில்லை.
ஓடையோரம் நெல்லிமரம், மதகோரம் கொய்யா மரம், கிணற்று மேட்டு மாமரம், வயல் பொலி ஓரம் சீதாப்பழமரம், ரோட்டொரம் சப்போட்டா மரம், பக்கத்து வீட்டு கொலுமிச்சை மரம்.. பசியைத் தீர்க்க வழியா இல்லை எங்கள் கோரக்காட்டுப்புதூரில்...??!!



செவ்வாய், ஜூன் 12, 2012

பெண்மையும் சமூகப் பரிணாமங்களும்

பெண்மை. கடவுளுக்குத் தலை வணங்காதவர்கள் கூட மரியாதையுடன் கை கூப்ப வைக்கும் சக்தி பெண்மைக்கே உண்டு. மனித நாகரிகம் வளர வளர, பெண்மைக்கான கண்ணோட்டங்களும் மாறியே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த கண்ணோட்டங்கள் நான்கு விதமான பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.

  • கடவுளாக கொண்டாடிய காலம் (ஆதி காலம்)
  • அடிமைகளாக நடத்திய காலம் (1980 வரை)
  • போகப்பொருளாய் பார்த்த காலம் (1980 லிருந்து இன்றும், நாளையும் கூட)
  • இழிவுப்போருளாக சித்தரித்த காலம் (2000 லிருந்து, இன்றும், என்று வரையோ?!)
ஆதி காலத்தில், மனித நாகரிகம் வளர்வதற்கு முன், ஒரு குட்டி மனிதனையே உருவாக்கும் அபூர்வ  சக்தியினை பெண் பெற்றிருந்தமையால், அவள் தெய்வமாகவும், தெய்வத்தினும் மிஞ்சிய சக்தியாகவும் போற்றப்பட்டாள். "நானும் உங்களுள் ஒருத்தி" என்று பெண் புரிய வைக்க முற்பட்டு, அதன் விளைவாக, தோளுக்கு தோளாய் நிற்க வேண்டியவள், ஆண் சமூகத்தின் காலடியில் கிடத்தப்பட் டாள்.
அன்றிலிருந்து ஆணிற்கு சேவகம் செய்வதற்கென்றே வாக்கப் பட்டவள் பெண் என்ற மிதர்ப்பில் ஆண் சமூகம் பெண்களை எள்ளி நகையாடியது. "மகாத்மா" என்று போற்றப்பட்டவர் கூட இதற்கு விதி விலக்கல்ல. பெண்களின் உடல் நலத்திற்காக போடப்பட்ட மலர் படுக்கைகள் யாவும் முட்படுக்கைகளாகவும், கோர மலைப்பாம்புகளாகவும் மாறி, கழுத்தை இறுக்கி, உடலளவிலும் மனதளவிலும் பெண்ணை பலமற்றவளாக மாற்றி இந்த சமுதாயம் அவளை அழகு பார்த்தது. ஆக, சமுதாயத்தில் மிகவும் நலிவற்றவர்கள் என்ற முட்கிரீடம் சூட்டப்பட்டவர்களாக பெண்மை நடத்தப்பட்டது.



அடுத்து, பெண்மையை போகப்பொருளாக சித்தரித்த காலம். இது என்று தொடங்கியது என்றே தெரியவில்லை. ஆலிங்கன சிற்பங்களிலும், அரசனின் அந்தப்புரங்களிலும் தொடங்கிய இந்த பரிணாம வளர்ச்சி, இன்று எங்கெங்கோ தொடருகிறது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் எங்கோ ஒரு ஓரத்தில் புதைந்து கிடந்தவைகள், இன்று எல்லாத் திரைப்படங்களில், ஏன், விளம்பரங்களில் கூட வெளிப்படையாகவே பெண்மை மிகக்கேவலமாக சித்தரிக்கப்படுகிறது .
குத்துப்பாடல்கள், ஆபாச சுவரொட்டிகள், இரட்டை அர்த்த வசனங்களை மீறி, இன்று புதிதாக ஒரு பாணியை 'கலை' உலகத்தினர் கடைபிடிக்கின்றனர். பெண்களைக் கேவலப்படுத்தி, அவர்களை 'காதலில் ஏமாற்றுபவர்கள்' என்று பட்டம் கட்டி, தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மதியாமல், மறந்து பாடித்திரிகின்றனர்.
பெண்களைத்திட்டி ஒரு பாடல் இருந்தால், அதுவே போதும் படம் வெற்றி  பெற்று விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் படக்குழுவினர் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

பெண்களின் கொடுமைகளை ஊருக்கு உரைக்கிறேன் என்ற பெயரில் காதலில் வாழ்க்கையை தொலைத்தவர்கள், கொடுமைக்கார கணவனிடம் சிக்கி கரை ஏற முடியாமல் தவிப்பவர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் என்று பெண்மையின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதையும் வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்யத்துடிக்கின்றனர்.  பெண்மை அல்லலில் சிக்கி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்  விளம்பர இடைவேளையில் தான், "அடிடா அவள, வேட் றா அவள ..", "எவண்டி உன்ன பெத்தான், கைல கெடைச்ச செத்தான்..", "வொய் திஸ் கொலவெறி  டீ.." என்று குடித்துவிட்டு பாடித்திரிகின்றனர். பெண்மையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்களே வா? ஆணாதிக்கமா? ஆணாதிக்க சமுதாயமா? எவற்றை கூறுவது.. எவற்றை விட்டுத்தள்ளுவது..??

நாளைய சமுதாயத்தில், ஏன் இன்றைய சமுதாயத்திலே கூட, எங்கள் சகோதரர்களின் பார்வையில் பெண்மை எப்படி இருக்கும் என்ற பதை பதைப்புடனும் , பயத்துடனும், மனதில் கனத்துடனும் முடிக்கத் தெரியாமல் முடிக்கிறேன்......

வெள்ளி, ஜூன் 08, 2012

புகைப்படங்கள் - கருப்பு/வெள்ளை முதல் Digicam வரை


பார்க்க பார்க்க ஆயிரம் கதைகள் சொல்பவை புகைப்படங்கள். கடந்த காலத்தை நாம் என்றுமே நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது. ஆனால், கடந்த கால நினைவுகளை சட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம், புகைப்படங்களாக.

தேடிப்பாருங்கள், வீட்டுப்பரண்களில், அலமாரிகளில் அல்லது பழைய வீட்டின் எங்கோ ஒரு மூலையில், கருப்பு வெள்ளையில் மிடுக்காகத் தோன்றும் தாத்தா, மெழுகு பொம்மை போல் பவ்யமாக நிற்கும் பாட்டி, பூ போட்ட சொக்காயில் அதிக அழகாய் நிற்கும் அத்தை... மனதோரம் ஆச்சரியமும் இதழோரம் சிரிப்பும் தான் வரும். அந்த கருப்பு/வெள்ளைப் படம் கூட வண்ணமயமான பல நினைவுகளைச் சுமந்திருக்கும்.

பெரியப்பா - பெரியம்மா திருமணம் - 1977 


அவ்வளவு பின் நோக்கிக்கூட செல்ல வேண்டாம். நம் ஒரு வயது புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? அது அநேகமாக நம் முதல் மொட்டைக்கு முன்னால் எடுத்ததாக இருக்கும். எண்ணெய் வைக்காமல், பரட்டை தலையோடு, பேந்த பேந்த விழித்துக்கொண்டு, வயிறு வரை தொங்கும் டாலர் செயினும், சிரிக்கவும் தெரியாமல், அழுகையும் வராமல், கிட்டத்தட்ட மோனலிசா மர்மப்புன்னகையுடன் இருப்போம் பாருங்க, செம காமெடி..?!



நானும் என் தம்பி சூர்யாவும் - 1998

நானும் சூர்யாவும் 2011

அதற்குப்பின், பள்ளியில் எடுக்கும் குரூப் போட்டோவிற்கு நடக்கும் அலப்பறை தான் டாப். கைக்குட்டையில் பவுடர் கொட்டிக்கொண்டு, பக்கத்து வீட்டு மல்லிகைப்பூவையும், ரோஜாப்பூவையும் வைத்துக்கொண்டு, என்றைக்கும் போடாத பாலிஷ்-ஐ ஷூ-க்கு இரண்டு முறை போட்டுக்கொண்டு, யார் பக்கத்தில்  உட்காருவது என்று பக்காவாக பிளான் போட்டுவிட்டு போவோம். ஒரு மாதம் கழித்து போட்டோ வந்து பார்த்தால், கண்ணை மூடிக்கொண்டோ, முறைத்துக்கொண்டோ இருப்போம். கடவுளே, விடு, அடுத்த வருடம் கலக்கி விடலாம் என்று கடைசி வரை குரூப் போட்டோக்கள் எல்லாம் சொதப்பலில் தான் முடிந்திருக்கும்.

குரூப் போட்டோ - 1994

7-8 வருடங்களுக்கு முன்பு, ஒரு சில பண்டிகைக்காலங்களில், முக்கியமாக தீபாவளி யில், யாரிடமாவது ஓசி காமிரா வாங்கிக்கொண்டு வந்து, இரண்டு மூன்று ரோல் போட்டு ஆசை தீர எடுக்கலாம் என்றால், அதில் ஒரு ரோல் முழுக்க புஸ்வானத்தையும் சங்கு சக்கரத்தையும் எடுத்து எடுத்தே வீணாய்ப்போயிருக்கும். மிச்சமானவற்றை மஞ்சகள் காட்டிலும், வாழைத் தோப்புகளிலும், நெல் வயல்களிலும் நின்று சேறு அப்பிக்கொண்டும் எறும்புக்கடிகளை பொறுத்துக்கொண்டும் போஸ் குடுத்ததெல்லாம் கொள்ளை அழகு.

புல்லெட் ஓட்டுவது போல், மத்தாப்பு பிடிப்பது போலவும், நான்-நீ என்று போட்டி போட்டுக்கொண்டு எடுத்து, அதில் பாதி போட்டோ க்கள், Shutter open பண்ணாமல், Lens இல் கை வைத்து மறைத்தும், ரோல் தீர்ந்து போயும் விழுந்திருக்கவே விழுந்திருக்காது. இத்தனை ரகளையும் மீறி வந்திருக்கும் புகைப்படங்கள், அவ்வளவு பொக்கிஷங்கள்..!!

தீபாவளி -1999

 தீபாவளி - 2011
இன்றைக்கு போட்டோ எடுப்பதெல்லாம் சகஜமாகி விட்டது. ஏதாவது ஒரு செடி பூ பூத்தால் பக்கத்தில் நின்று ஒரு போஸ் (அது ஒற்றையாக பூத்தாலும் சரி, கொத்தாக பூத்தாலும் ), Cafeteria போனால், ஹாஸ்டல் மெஸ் சில் புதிதாய் ஏதேனும் போட்டால், தோழிகள் யாரவது செமினார் எடுத்தால், வகுப்பில் தூங்கினால் கூட விடுவதில்லை, ஐஸ் கிரீம் சாப்பிட்டாலும் சரி, அதிசயமாக படிச்சாலும் evidence காக இதையெல்லாம் போட்டோ எடுத்து வைக்க வேண்டியது இருக்கு, தோழி யில் ஸ்கூட்டி முதல் கல்லூரி சேர்மனின் பென்ஸ் கார் வரை எல்லா முன்னாலும் ஒரு போஸ், ஒரு க்ளிக், ஒரு ப்ளாஷ்..

சராசரியாக, நம் கணினிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, புகைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நீங்கள் வேண்டுமானால் ஒப்பிட்டுப்பாருங்களேன்,  பத்து வருடத்திற்கு முந்தய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும், எவை அதிகம் சுவாரஸ்யமான கதைகள் சொல்கிறது என்று உங்களுக்கே புரியும்.

புதன், மே 16, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும். ஒரு 15 வருடங்களுக்கு முன், நம் பொக்கிஷங்களில் முக்கியப் பங்கு வகித்தவைகள். சலித்துப்போட்ட ஆற்று மணல்களில் குட்டியூண்டு கிளிஞ்சல்களை கண்டுபிடித்து, வராத கடல் அலைகளை காதிற்குள் வைத்துக்கேட்ட சந்தோஷங்கள் சொல்ல சொல்ல குறையாது. அப்போதெல்லாம் மயிலிறகு வைத்திருப்பவர்கள் எல்லாம்  அம்பானிகள். அது குட்டி போடுமா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அந்த மயிலிறகு கொத்திலிருந்து ஒரு மயிலிழையை பெறுவதற்குள் எத்தனை பாடு..? எத்தனை பாசாங்கு..?? 
புது வருடத்து நாணயங்கள், நாய்க்குட்டி படம் போட்ட தீப்பெட்டிகள், சாமி படம் போட்ட கடலை மிட்டாய் லேபில்கள், சீரக மிட்டாய்க்கு வாங்கிய  டப்பாக்கள், ஜவ்வு மிட்டாய் மோதிரங்கள், ஐஸ் குச்சிகள், பூமர் ஸ்டிக்கர்கள்.. விலை மதிக்க முடியாதவைகள் அல்ல, ஆனால் பொக்கிஷமான அதன் நினைவுகள்..!!

இந்த நினைவுகளை எல்லாம் திரட்டி ஒரு தொடர்பதிவு எழுத உள்ளேன். இனி, முதல் பதிவு..,


தொட்டாங்குச்சி நினைவுகள்

எங்கள் பால்ய வயதில், அப்பா தூக்கிப்போட்ட காலி தீப்பெட்டி யையும் அம்மா தூக்கிப்போட்ட தொட்டாங்குச்சியையும் நாடியே எங்கள் விளையாட்டுகள் இருக்கும். நான்கு தீப்பெட்டிகள் சேர்த்து நாற்காலி, சோபா, கட்டில், வண்டி யும், தொட்டாங்குச்சிகள் அரிசி வைக்கும், சமைக்கும் பாத்திரங்களாகவும், சூட டப்பாக்களும், பல் பொடி டப்பாக்களும் இதர பாத்திரங்களாகவும் உருமாறும். மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டிகளில் பத்திரப்படுத்தி, கந்தலான சாக்கினை போட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அட்டாளிகளிலும், கட்டுத்  தறிகளிலும் மறைத்து வைத்த காலங்கள் நினைவிலிருந்து மறையாதவை.
வருடமொருமுறை தேர்க்கடைகளில் தேடிப்பிடித்து வாங்கும் பொம்மைகள் கூட ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும்.ஆனால், எங்கள் விளையாட்டுப் பொருள்கள் எங்களுக்கு என்றுமே சலிப்படைந்ததில்லை.

நீர் பாய்ந்து இரண்டு நாட்களான வாய்க்கால்களில் படர்ந்து கிடக்கும் ஈர மணல்களில் சின்ன கொட்டாங்குச்சிகளில் பனியாரங்களும், பெரிய  கொட்டாங்குச்சிகளில் இட்லிகளும் சுடுவது எங்களுக்கு பிடித்தமான விளையாட்டு. அதோடு நின்று விடாமல், மஞ்சள் வயல்களில் விளைந்து கிடக்கும் கீரைகள், மிளகாய்கள், தக்காளிப் பழங்கள், கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கும் கொய்யா பிஞ்சுகள் மா பிஞ்சுகள், வாழை ப்பூக்கள் என்று எதையும் விட்டு வைக்காமல், flavor க்கு வீட்டிலிருக்கும் மஞ்சள் /மிளகா ய்ப்பொடிகளையும் சேர்த்து அட்டகாசமான சமையல் நெருப்பில்லாமல், புகையில்லாமல் தயாராகிவிடும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மிளகுதக்காளிப்பழகளையும், பெயர் தெரியாத பூக்களையும் கோவைப்பழங்களையும் வைத்து ரசனையுடன் அலங்கரித்து பூவரச இலைகளில் சம்பிரதாயமாக உப்பு வைத்து பரிமாறி, பாசாங்காக உண்டு மகிழ்ந்த தருணங்களை இப்போது நினைத்தாலும் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

நான்கு ஐந்து செங்கல்களை வைத்து வீடு கட்டி, அதற்கு உள் அலங்காரங்கள், வெளி அலங்காரங்கள் செய்து, கோலம் போட்டு, அதன் மேல் செம்பருத்தியையும் மயில் மாணிக்கத்தையும் படர விட்டு, அதை ஒவ்வொரு கோணங்களிலும் ரசித்து பெருமிதப்பட்ட காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது.

தென்னங் குரும்பைகளில் பூதங்களும்,பனங்கொட்டைகளில் சொட்டை தலை தாத்தாவும், தென்னம் பாலைகளில் பூக்களைக்குமித்து வாய்க்கால்களில் படகு விடுவதும், வண்டு கடித்து மொக்கையாகிப்போகும் பாலைகளில் பேனா stand கள் செய்தும், தினமும் சாப்பிடும் ஐஸ் குச்சிகளில் வீடுகளும், 3 ரோசெஸ் டப்பாக்களில் குருவி கூடுகளும், சொளக்கதிரிற்கு ஜடை பின்னுவதுமாகக்கழிந்தன எங்கள் தொட்டாங்குச்சி காலங்கள்.

மதிய வேளைகளில், ஈர மணல்களில் கால் பாதங்களை புதைத்து வீடுகள் செய்து, அதனை சுற்றியும் தோட்டம் போட்டு, பாசனம் செய்து நாங்களும் விவசாயி என்று பெரியமனுஷத்தனமாக விளையாண்டதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. தென்னை ஓலைக்கடிகாரங்கள் (எங்க ஊர் Rolex) ,கை கால் ஆட்டி ஆட்டி விளையாடும் பொம்மை , பயமுறுத்தும் பாம்புகள் என்று எங்களைச்சுற்றி இருந்த பொம்மை உலகமே வேறு.

Puppet play, Blocks & buildings, Soccer goal, Bingo... என்று ஏதேதோ விளையாட்டுகளைக் கேட்கும் போது எனக்கு ஏக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ வந்ததில்லை. இட்லி சுடுவதில் கற்றுக்கொண்ட நேர்த்தி, நுணுக்கம், வீடு கட்டுவதில் வளர்த்துக்கொண்ட கற்பனைத்திறன், தென்னை மர மட்டைகளில் பொம்மை செய்வதில் கிடைத்த புதுமையான ஐடியாக்கள்.. இன்று வரை கூட தினுசு தினுசாய் பல கற்பனை பொருள்கள் செய்யவும், புதுமையாய் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்தவைகள் கொட்டங்குச்சிகளே..!!


வெள்ளி, ஏப்ரல் 27, 2012

Google-ஓ-Google

வாழ்க்கையின் சுவாரஸ்யமே விடை தெரியாத கேள்விகளிலும், புரிந்து கொள்ள முடியாத விசித்திரங்களிலும், விவரிக்கமுடியாத அதிசயங்களிலும் தான் புதைந்து கிடக்கின்றன. ஆனால், இன்றைக்கு விடைதெரியாத கேள்விகள் என்று எதையும் சொல்வதற்கில்லை (தேர்வுகளை விடுத்து :) ) 'கூகிள் இருக்க பயமேன்?'
உண்மையில் Linkedln profile கள் சிம் கார்டுகள் வாங்கவும், Facebook profile கள் திருமணப்பொருத்தம் பார்க்கவும் பயன்படுத்தப்படும் நாட்களுக்கு மிக அருகில் வந்துவிட்டோம் நாம். சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கூகிள்'ஐ நாட ஆரம்பித்து விட்டோம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் நம் தேடல்களே வேறு. 

பாட்டியின் கை வண்ணத்தில் நா ஊரும் பதார்த்தங்கள், தாத்தா வின் சில்லறைகள், புத்தகங்கள், அம்மா பார்த்து பார்த்து எடுத்த புதுத்துணிகள், அப்பாவின் முரட்டுக் கைகடிகாரம், அவரது சட்டைப் பக்கெட்டுகள்.. இப்படி சொல்லி சொல்லி அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றுவரை அதே தேடல்கள் தான், ருசி ருசியான உணவு வகைகள், பேஷன் ஐ பறை சாற்றும் உடைகள், கடிகாரங்கள், வீடியோக்கள், முகம் தெரியாதவர்களிடம் பெறும் அறிவுரைகள், ஆலோசனைகள், பாராட்டுக்கள்... வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எங்கே போய் விட்டன?!

இணையம் உங்களுக்கு சுவாரஸ்யமாகவே தோணலாம். கலர் கலராய் படங்களும், பாப்-அப் விளம்பரங்களும், யாரோ அந்நிய மனிதனின் பீட்டர்-ம் சுவாரஸ்யம் கிடையாது.
நிஜமான சுவாரஸ்யம் எங்கு இருக்கிறது?

நம் பாட்டிகளிடம் கேட்டுப்பாருங்கள், அவர் சொல்லுவார் நூறு ரெசிபிகள். அவை ஒவ்வொன்றும் நம் தாத்தாவுடைய/அப்பாவுடைய/அத்தையுடைய விருப்பமாதாகவே இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமே. அவருடைய சுருக்குப்பையிலிருந்து வரும் கதைகள் யாவும் தாத்தாவின் கம்பீரத்தையும், அப்பாவின் கெட்டிக்காரத்தையும், அத்தையின் விட்டுக்கொடுத்தலையும் கொஞ்சம் மிகையாகவும், மிஞ்சும் சுவையோடும், பீட்டர் விடுவார் பாருங்கள்.. Facebook எல்லாம் தோற்றுப்போய்விடும். 

நம் தாத்தாவிடம் கேட்டுபாருங்கள், அவரது துருப்பிடித்த அரையணா கூட பசுமையான நினைவுகளை விடாமல் பற்றியிருக்கும். அது அவரது முதல் சம்பாத்யமாகக்கூட இருக்கலாம். அவரது முழு உழைப்பிலும், வியர்வையிலும் வெட்டிய கிணறு, ஊற்றுத் தண்ணீ ரை முதல்  முதலில் அள்ளிக்குடித்த பரவசம், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரிக்கும் அவர் வீடு கட்டிய அனுபவம், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த கர்வம், பாம்புகளையும் தேள்களையும் கையில் எடுத்து விளையாடிய வீரம், தென்னை மரமும், பனை மரமும் ஏறத்தூண்டிய இளமை, தூக்கு போசியுடன் அவர் பள்ளி சென்ற பருவம், கட்டை வண்டி கட்டிக்கொண்டு சந்தைக்கு ஷாப்பிங் போனது, தேர் கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தது.. கால இயந்திரத்தில் பயணம் செய்த உணர்வைத்தரும். 'Hall of fames' இல் ஏற்றப்படாத சாதனை மனிதர்கள் இவர்கள்.

நம் அம்மாக்களை கேட்டுப்பாருங்கள், நமக்கு எந்த உடை பொருந்தும் என்று அவரை விட வேறு யாருக்கும் ரசித்து சொல்லத்தெரியாது. அவரது தேர்வுகள் 'Out-of-fashion' ஆகா இருக்கலாம். ஆனாலும் அன்பு, பாசம், பரிவு, கம்பீரம் கலந்த கலவையாக நிச்சயம் இருக்கும். இன்றுவரை என் உடைத்தேர்வுகள் எல்லாம் என் அம்மாவினுடையதே. சிவகிரி வாணி கட் பீஸிலிருந்து ஈரோடு கடை வீதி சுமங்கலி சில்க்ஸ் இல் ஆரம்பித்து சென்னை சில்க்ஸ் வரை கூட தேடல் முடியாது. அதுவும் என் ஒவ்வொரு உடைகளும் பின்னணியிலும் சின்ன சின்ன கோபங்கள், நிறைய சந்தோஷங்கள், அர்த்தமற்ற சண்டைகள், சம்பந்தமே இல்லாத வீரப்புகள் என்று பல சுவாரஸ்யங்கள் புதைந்து கிடக்கும். ஆன்லைன் இல் யாரோ கலர் கலராய் மாடல் களின் பரிந்துரைகளும் ஹிட் லிஸ்ட் உம் அவ்வளவு சுவாரஸ்யமானதா என்ன..?


நம் அப்பாவிடம் கேட்டுப்பாருங்கள் placement  இல் ஆரம்பித்து, வாழ்க்கை வரை. ஏனெனில், அவர் கற்ற பாடங்களும், பெற்ற அனுபவங்களும் ஏராளம். நம்மைப்பற்றி அறியாதவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை விட, நம் தந்தையிடமிருந்து  பெற்றவைகள், ஒரு வினையூக்கி போல, நம்முள் வெற்றி விதையை விதைத்து விட்டுப்போகும்.

இந்த சுவாரஸ்யங்கள் Page ranking algorithm மூலமாகவோ, hit list மூலமாகவோ கிடைக்காது. கொஞ்சம் கூகிள்-ஐ விட்டு வெளியே வந்து பாருங்கள், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்று புரியும்.
சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!!

குறிப்பு: படங்கள் - கூகிள்-கு நன்றி :)

திங்கள், ஏப்ரல் 09, 2012

கோரக்காட்டுபுதூர் Professionals

பொதுவாக நகரத்தில் பணிக்குச் செல்பவர்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.

  • மடிப்பு கலையாத branded சட்டையில் அழுக்கு "டை" கட்டியிருந்தால், அது Management professional 
  • தினமும் காலையில் coolers போட்டுக்கொண்டு கடலை போட்டால், அது IT Professional 
  • பாக்கெட் இல் இரண்டு, மூன்று கலர் பேனா வைத்திருந்தால், அது Engineers .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஒரு profession தான், விவசாயம் - Agriculture - किसान. இவர்களும் அதிகாலைப் பரபரபிற்கும், வார இறுதி கொண்டாட்டத்திற்கும் பழக்கப்பட்டவர்களே. காலை 7.30 மணிக்கு தூக்குபோசில் சாப்பாடு எடுத்துக்கொண்டும், பொறி காகிதத்தில் வெற்றிலையும் பாக்கும், இப்போது புதிதாக செல்போனும் கட்டிக்கொண்டு, பள்ளி செல்லும் குழந்தையின் சலசலப்போடும், ஆரவாரத்தோடும் தொடங்கும் இவர்களது காலைப் பொழுதுகள் , தினம் தினம் தினுசு தினுசாய் வேலை பார்க்கும் சகலகலா வல்லவர்கள். களை பறித்தல் (Debugging), பாத்தி கட்டுதல் (Module development), நீர்  பாய்ச்சுதல் (Prototyping) என்று உடலுக்கும் உள்ளத்திற்கும் சவாலான வேலைகளை அசால்ட்டாக செய்வர். 



இவர்களுக்கும் dress code எல்லாம் உண்டு. வெயிலிலிருந்து தப்பிக்கவும், அரிப்புகளிளிருந்து காத்துக்கொள்ளவும், கணவருடைய / மகனுடைய / சகோதரனுடைய முழுக்கை சட்டைகள், கோட் ஆகவும், பழைய சேலையோ தாவணியோ தலைக்கவசமாகவும் மாறிவிடும். காலையில் தோராயமாக 7.15 மணிக்கு ஊர்முனை பிள்ளையார் கோவிலில் கூட்டம் கூடி, அவரவர் சகாக்களுடன் கூட்டு சேர்ந்து, எவர் காட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்படும். 7.45 மணியளவில் தோட்டத்திற்குள்  கால் வைப்பார். கை, அதன் போக்கில் மும்முரமாக வேலை செய்ய, மனம் வீட்டு பிரச்சனையில் லயித்திருக்க, வாய் வெற்றிலையுடன், திருமதி செல்வத்தையும், தென்றலையும் கடித்துக் குதறிக்கொண்டிருக்கும்.

10 மணிக்கு காலை உணவு! கொய்யா, மா, வாழை மரங்கள் ஆசையாய் தலை கோதி விட, பழைய சோறும், அப்பொழுது தான் மண்ணிலிருந்து  பறித்து எடுத்த வெங்காயமும், கை நிறைய அள்ளிக்  குடித்த கிணற்று  தண்ணீரும்.. அட அட அட.. This is the secret of their energy!



இந்த  1 மணி நேர இடைவெளியில், 1500 ரூபாய் கொரியன் போனில் அட்டகாசமாக பாட்டுபாடி நலம் விசாரிக்கும் கணவன்மார்கள், மிட்டாய் வாங்க  காசு கேட்க வரும் பொடிசுகள், காலேஜ் படிப்பைப்பற்றி விசாரிப்புகள், சின்ன வயதில் செய்த அட்டகாசங்கள், நன்றாக படிக்கவேண்டும், வெயிலில் வர வேண்டாம், நன்றாக சாப்பிட வேண்டும், சத்தாக சாப்பிடவேண்டும், எத்தனை அக்கறைகள், எத்தனை எத்தனை கரிசனங்கள்..சேரனும் தங்கர்பச்சானும் சேர்ந்த  படக்கலவைங்க  இது..

1 மணிக்கு தேநீர் நேரம். கிழக்கு வேலி பார்த்த தென்னை மரமோ, தண்ணீர் மதகோ இவர்களது சிம்மாசனமாய் அமைந்து விடும். எவ்ளோ மொக்கையா டீ கொண்டு போய் குடுத்தாலும், நம்மை விட்டு கொடுக்காமலேயே பேசுவாங்க பாருங்க.. இதுல தான் எங்க மக்களை அடிசுக்க ஆளே கிடையாதுங்க ... 

கண்ணு, பாப்பாத்தி, அழகு மொவர, பட்டுகுட்டி, கொங்கு பொடுசு.. இவங்கள மாதிரி வித விதமா  கொஞ்சி பேசவும் யாராளையும் முடியாது.. 



3 மணிக்கு இவங்க duty முடிஞ்சிரும். வெள்ளிக்கிழமை தான் இவங்களுக்கு salary day. எங்க ஊர் சந்தை அப்போ தான். இவங்களுக்கும் incentives எல்லாம் உண்டுங்க. அறுவடை நாள்கள்'ல நெல்லும், கடலையும் கிடைக்கும். பயிர் விதைக்கிற நாள் ஆகட்டும், அறுவடை தொடங்கற நாள் ஆகட்டும், முடியுற நாள் ஆகட்டும்  நிச்சயம் மிச்சர், போண்டா  வோட 'Tea Party' தான்.

மொத்தத்தில், எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும்  கிடையாது, வாழ்க்கையை  அனுபவிப்பவர்களும்  கிடையாதுங்க ..