செவ்வாய், ஜூன் 12, 2012

பெண்மையும் சமூகப் பரிணாமங்களும்

பெண்மை. கடவுளுக்குத் தலை வணங்காதவர்கள் கூட மரியாதையுடன் கை கூப்ப வைக்கும் சக்தி பெண்மைக்கே உண்டு. மனித நாகரிகம் வளர வளர, பெண்மைக்கான கண்ணோட்டங்களும் மாறியே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த கண்ணோட்டங்கள் நான்கு விதமான பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.

  • கடவுளாக கொண்டாடிய காலம் (ஆதி காலம்)
  • அடிமைகளாக நடத்திய காலம் (1980 வரை)
  • போகப்பொருளாய் பார்த்த காலம் (1980 லிருந்து இன்றும், நாளையும் கூட)
  • இழிவுப்போருளாக சித்தரித்த காலம் (2000 லிருந்து, இன்றும், என்று வரையோ?!)
ஆதி காலத்தில், மனித நாகரிகம் வளர்வதற்கு முன், ஒரு குட்டி மனிதனையே உருவாக்கும் அபூர்வ  சக்தியினை பெண் பெற்றிருந்தமையால், அவள் தெய்வமாகவும், தெய்வத்தினும் மிஞ்சிய சக்தியாகவும் போற்றப்பட்டாள். "நானும் உங்களுள் ஒருத்தி" என்று பெண் புரிய வைக்க முற்பட்டு, அதன் விளைவாக, தோளுக்கு தோளாய் நிற்க வேண்டியவள், ஆண் சமூகத்தின் காலடியில் கிடத்தப்பட் டாள்.
அன்றிலிருந்து ஆணிற்கு சேவகம் செய்வதற்கென்றே வாக்கப் பட்டவள் பெண் என்ற மிதர்ப்பில் ஆண் சமூகம் பெண்களை எள்ளி நகையாடியது. "மகாத்மா" என்று போற்றப்பட்டவர் கூட இதற்கு விதி விலக்கல்ல. பெண்களின் உடல் நலத்திற்காக போடப்பட்ட மலர் படுக்கைகள் யாவும் முட்படுக்கைகளாகவும், கோர மலைப்பாம்புகளாகவும் மாறி, கழுத்தை இறுக்கி, உடலளவிலும் மனதளவிலும் பெண்ணை பலமற்றவளாக மாற்றி இந்த சமுதாயம் அவளை அழகு பார்த்தது. ஆக, சமுதாயத்தில் மிகவும் நலிவற்றவர்கள் என்ற முட்கிரீடம் சூட்டப்பட்டவர்களாக பெண்மை நடத்தப்பட்டது.



அடுத்து, பெண்மையை போகப்பொருளாக சித்தரித்த காலம். இது என்று தொடங்கியது என்றே தெரியவில்லை. ஆலிங்கன சிற்பங்களிலும், அரசனின் அந்தப்புரங்களிலும் தொடங்கிய இந்த பரிணாம வளர்ச்சி, இன்று எங்கெங்கோ தொடருகிறது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் எங்கோ ஒரு ஓரத்தில் புதைந்து கிடந்தவைகள், இன்று எல்லாத் திரைப்படங்களில், ஏன், விளம்பரங்களில் கூட வெளிப்படையாகவே பெண்மை மிகக்கேவலமாக சித்தரிக்கப்படுகிறது .
குத்துப்பாடல்கள், ஆபாச சுவரொட்டிகள், இரட்டை அர்த்த வசனங்களை மீறி, இன்று புதிதாக ஒரு பாணியை 'கலை' உலகத்தினர் கடைபிடிக்கின்றனர். பெண்களைக் கேவலப்படுத்தி, அவர்களை 'காதலில் ஏமாற்றுபவர்கள்' என்று பட்டம் கட்டி, தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மதியாமல், மறந்து பாடித்திரிகின்றனர்.
பெண்களைத்திட்டி ஒரு பாடல் இருந்தால், அதுவே போதும் படம் வெற்றி  பெற்று விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் படக்குழுவினர் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

பெண்களின் கொடுமைகளை ஊருக்கு உரைக்கிறேன் என்ற பெயரில் காதலில் வாழ்க்கையை தொலைத்தவர்கள், கொடுமைக்கார கணவனிடம் சிக்கி கரை ஏற முடியாமல் தவிப்பவர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் என்று பெண்மையின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதையும் வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்யத்துடிக்கின்றனர்.  பெண்மை அல்லலில் சிக்கி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்  விளம்பர இடைவேளையில் தான், "அடிடா அவள, வேட் றா அவள ..", "எவண்டி உன்ன பெத்தான், கைல கெடைச்ச செத்தான்..", "வொய் திஸ் கொலவெறி  டீ.." என்று குடித்துவிட்டு பாடித்திரிகின்றனர். பெண்மையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்களே வா? ஆணாதிக்கமா? ஆணாதிக்க சமுதாயமா? எவற்றை கூறுவது.. எவற்றை விட்டுத்தள்ளுவது..??

நாளைய சமுதாயத்தில், ஏன் இன்றைய சமுதாயத்திலே கூட, எங்கள் சகோதரர்களின் பார்வையில் பெண்மை எப்படி இருக்கும் என்ற பதை பதைப்புடனும் , பயத்துடனும், மனதில் கனத்துடனும் முடிக்கத் தெரியாமல் முடிக்கிறேன்......

வெள்ளி, ஜூன் 08, 2012

புகைப்படங்கள் - கருப்பு/வெள்ளை முதல் Digicam வரை


பார்க்க பார்க்க ஆயிரம் கதைகள் சொல்பவை புகைப்படங்கள். கடந்த காலத்தை நாம் என்றுமே நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது. ஆனால், கடந்த கால நினைவுகளை சட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம், புகைப்படங்களாக.

தேடிப்பாருங்கள், வீட்டுப்பரண்களில், அலமாரிகளில் அல்லது பழைய வீட்டின் எங்கோ ஒரு மூலையில், கருப்பு வெள்ளையில் மிடுக்காகத் தோன்றும் தாத்தா, மெழுகு பொம்மை போல் பவ்யமாக நிற்கும் பாட்டி, பூ போட்ட சொக்காயில் அதிக அழகாய் நிற்கும் அத்தை... மனதோரம் ஆச்சரியமும் இதழோரம் சிரிப்பும் தான் வரும். அந்த கருப்பு/வெள்ளைப் படம் கூட வண்ணமயமான பல நினைவுகளைச் சுமந்திருக்கும்.

பெரியப்பா - பெரியம்மா திருமணம் - 1977 


அவ்வளவு பின் நோக்கிக்கூட செல்ல வேண்டாம். நம் ஒரு வயது புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? அது அநேகமாக நம் முதல் மொட்டைக்கு முன்னால் எடுத்ததாக இருக்கும். எண்ணெய் வைக்காமல், பரட்டை தலையோடு, பேந்த பேந்த விழித்துக்கொண்டு, வயிறு வரை தொங்கும் டாலர் செயினும், சிரிக்கவும் தெரியாமல், அழுகையும் வராமல், கிட்டத்தட்ட மோனலிசா மர்மப்புன்னகையுடன் இருப்போம் பாருங்க, செம காமெடி..?!



நானும் என் தம்பி சூர்யாவும் - 1998

நானும் சூர்யாவும் 2011

அதற்குப்பின், பள்ளியில் எடுக்கும் குரூப் போட்டோவிற்கு நடக்கும் அலப்பறை தான் டாப். கைக்குட்டையில் பவுடர் கொட்டிக்கொண்டு, பக்கத்து வீட்டு மல்லிகைப்பூவையும், ரோஜாப்பூவையும் வைத்துக்கொண்டு, என்றைக்கும் போடாத பாலிஷ்-ஐ ஷூ-க்கு இரண்டு முறை போட்டுக்கொண்டு, யார் பக்கத்தில்  உட்காருவது என்று பக்காவாக பிளான் போட்டுவிட்டு போவோம். ஒரு மாதம் கழித்து போட்டோ வந்து பார்த்தால், கண்ணை மூடிக்கொண்டோ, முறைத்துக்கொண்டோ இருப்போம். கடவுளே, விடு, அடுத்த வருடம் கலக்கி விடலாம் என்று கடைசி வரை குரூப் போட்டோக்கள் எல்லாம் சொதப்பலில் தான் முடிந்திருக்கும்.

குரூப் போட்டோ - 1994

7-8 வருடங்களுக்கு முன்பு, ஒரு சில பண்டிகைக்காலங்களில், முக்கியமாக தீபாவளி யில், யாரிடமாவது ஓசி காமிரா வாங்கிக்கொண்டு வந்து, இரண்டு மூன்று ரோல் போட்டு ஆசை தீர எடுக்கலாம் என்றால், அதில் ஒரு ரோல் முழுக்க புஸ்வானத்தையும் சங்கு சக்கரத்தையும் எடுத்து எடுத்தே வீணாய்ப்போயிருக்கும். மிச்சமானவற்றை மஞ்சகள் காட்டிலும், வாழைத் தோப்புகளிலும், நெல் வயல்களிலும் நின்று சேறு அப்பிக்கொண்டும் எறும்புக்கடிகளை பொறுத்துக்கொண்டும் போஸ் குடுத்ததெல்லாம் கொள்ளை அழகு.

புல்லெட் ஓட்டுவது போல், மத்தாப்பு பிடிப்பது போலவும், நான்-நீ என்று போட்டி போட்டுக்கொண்டு எடுத்து, அதில் பாதி போட்டோ க்கள், Shutter open பண்ணாமல், Lens இல் கை வைத்து மறைத்தும், ரோல் தீர்ந்து போயும் விழுந்திருக்கவே விழுந்திருக்காது. இத்தனை ரகளையும் மீறி வந்திருக்கும் புகைப்படங்கள், அவ்வளவு பொக்கிஷங்கள்..!!

தீபாவளி -1999

 தீபாவளி - 2011
இன்றைக்கு போட்டோ எடுப்பதெல்லாம் சகஜமாகி விட்டது. ஏதாவது ஒரு செடி பூ பூத்தால் பக்கத்தில் நின்று ஒரு போஸ் (அது ஒற்றையாக பூத்தாலும் சரி, கொத்தாக பூத்தாலும் ), Cafeteria போனால், ஹாஸ்டல் மெஸ் சில் புதிதாய் ஏதேனும் போட்டால், தோழிகள் யாரவது செமினார் எடுத்தால், வகுப்பில் தூங்கினால் கூட விடுவதில்லை, ஐஸ் கிரீம் சாப்பிட்டாலும் சரி, அதிசயமாக படிச்சாலும் evidence காக இதையெல்லாம் போட்டோ எடுத்து வைக்க வேண்டியது இருக்கு, தோழி யில் ஸ்கூட்டி முதல் கல்லூரி சேர்மனின் பென்ஸ் கார் வரை எல்லா முன்னாலும் ஒரு போஸ், ஒரு க்ளிக், ஒரு ப்ளாஷ்..

சராசரியாக, நம் கணினிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, புகைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நீங்கள் வேண்டுமானால் ஒப்பிட்டுப்பாருங்களேன்,  பத்து வருடத்திற்கு முந்தய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும், எவை அதிகம் சுவாரஸ்யமான கதைகள் சொல்கிறது என்று உங்களுக்கே புரியும்.