வெள்ளி, மார்ச் 16, 2012

கூட்டை விட்டு வெளியேறுகிறோமா நாம் ??

நத்தை - தன் அலட்சியத்திற்காக கடவுளிடம் சாபம் பெற்று, தன் கூட்டை முதுகில் சுமப்பதாக வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. இன்றைய காலகட்டத்தில், நாமும் நத்தைகள் போலத்தான். நத்தைகள் போல ஒரு சின்ன ஓட்டிற்குள் ஒடுங்கிக்கொண்டு, நம் வீட்டை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறோம்.



நாம் வளர வளர, நம் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, நம் வீட்டிற்கும் குடும்பத்திற்குமான இடைவெளியும் தூரமும் அதிகரிக்கிறது.
3 வயது வரை 24  மணிநேரங்களும் அம்மாவின் செல்லத்திலும், அப்பாவின் வண்டி சவாரிகளிலும் கழிந்த நாட்களெல்லாம் குறைந்து, பள்ளிக்கூடம் என்ற பூதம் வந்து நமது 6 மணி நேரத்தை முத்தாய் அபகரித்துக்கொள்ளும். 14 வருடங்கள்!! ஏறக்குறைய வனவாசம் போல.

இந்தக்காலத்தில் தான் அரைக்கால் சட்டைகள் முழுக்கால் சட்டைகளாகவும், சிண்டுகள் இரட்டைப் பின்னல் களாகவும் பரிமாற்றமடையும். அன்றுவரை, மதிய உணவை இரண்டடுக்கு எவர்சில்வர் டப்பாவில் அடைத்துக்கொடுக்கும் அம்மாவிற்கும், பார்த்து பார்த்து செலவு செய்யும் அப்பாவிற்கும் பொறி தட்டும். எதோ ஒன்று பறிபோகும் உணர்வு, காலமென்னும் கொடிய அரக்கன் நம்மை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு செல்ல, செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். அன்றெல்லாம், எனக்கு அது பெரிதாகத்தெரியவில்லை.ஆனால், இன்று நான் திகைத்து நிற்கிறேன். கூட்டை விட்டு வெளியேறுகிறோமா நாம் ??

LKG இல் நான் சென்ற பள்ளி வண்டி விபத்துக்குள்ளாகி என் தலையின் காயம் பட்ட பொது, பள்ளியையும் மாற்றி, பள்ளிக்கு தினமும் காலையிலும் மாலையிலும் அழைத்துச்சென்று வந்தார், என் தந்தை. Royal Enfield புல்லட்டில் ஆரம்பித்த இந்தப்பயணம், நாளடைவில் Hero Honda வில் என் தாத்தா வோடும் என் தம்பியோடும் தொடந்தது.


என் 7 வயதில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் சுமார் ஒன்றரை வருடங்கள் மருத்துவமனைக்கு என் அம்மாவுடன் அலைந்த போது உணவின் மகத்துவம் புரியவில்லை, நெடுநெடுவென்று வளர்ந்த தாடி வைத்த மருத்துவர் ஊசியைக்காட்டி பயமுறுத்தியபோது கூட உணவின் அருமை தெரியவில்லை. தோசையின் மொருமொருப்பு பற்றவில்லை, பாட்டியைப்போல சட்னி அரைக்கத்தெறியவில்லை, தோழியின் தாயைப்போல சப்பாத்தி மிருதுவாக செய்யத்தெரியவில்லை என்று அம்மாவிடம் சண்டைபோட்ட போது, அம்மாவின் கைப்பக்குவம் அறியவில்லை. ஐந்தாவது ஆண்டாக விடுதியில் சாப்பிட்டு வரும்போது தான், தோட்டத்தில் விளைந்து கிடக்கும் சுரைக்காயின் ருசியும், தள தளவென்று வளர்ந்து கிடக்கும் கீரையின் அருமையும் இப்பொழுது தான் என் புத்திக்கு உரைக்கிறது.


LKG க்கு முன்.. :)
MCA விற்கு பின்.. :(

பென்சிலுக்கும் மிட்டாய்க்கும் சண்டை போட்ட தம்பியின் பாசம் அன்று எனக்கு பெரிதாய்த் தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் பறித்த கொய்யாவைக்கூட அக்காவிற்கு பிடிக்கும் என்று ப்ரிஜ்ஜில் வைத்திருந்து கொடுக்கும் போது நெகிழ்ந்து போனேன். 

ஆறு மணிநேரமாக இருந்த தொலைவு, பத்து மணி நேரமாகி, பதினைந்து நாட்களாகி, இப்பொழுது ஒரு மாதத்திற்கும் மேலாகி நிற்கிறது. வளாகத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன் நான். இனி எட்டு மாதங்களில் நான் என் தனி உலகில் வாழப்போகிறேன். இந்த தூரம் இனி மேலும் அதிகமாகலாம்.


வளர்ந்து நிற்கும் ரோஜா செடிகளும், கன்றுக்குட்டிகளும், புதிதாய்  பிறந்திருக்கும் ஆடுக்குட்டிகளுமே எனக்கு அந்நியமாய்த் தோன்றி உறுத்துகிறது. அலமாரிக்குள் உறங்கும் என் பொருள்கள், இரண்டு நாட்கள்  கிடைக்கும் அதீத பாசம்.. ஒரு வாரமாய் அம்மா சேகரித்து வைத்திருக்கும் பூக்கள், ஊட்டி விடச்சொல்லி கெஞ்சும் தம்பி, மதியம் 2 மணிக்கு சரியாய் இளநீர் குடிக்க அழைக்கும் தாத்தா, இளைத்துப்போய் விட்டாய் என்று வாடிக்கையாய்க் கூறும் பாட்டி.. இந்த இரண்டு நாள் உலகம் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்..


திங்கள், மார்ச் 05, 2012

விலைகளுக்கா விலைபோகிறோம்

'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் பேணுவோம்' என்று முண்டாசு அணிந்த ஓவியனின் கிறுக்கல்களைத் தாங்கி நின்ற விளம்பரத்தட்டிகளின் காலமெல்லாம் 'ஆசை' சாக்லேட்  போல இருப்பிடம் தெரியாமலே பொய் விட்டன. அதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இம்மனித குலம் விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. விழிப்புணர்வுத் தட்டிகளைவிட விளம்பரத்தட்டிகள் நம்மை வசீகரித்து விடுகின்றன.

'பிளாஸ்டிக் ஐத் தவிர்ப்போம்' என்பதை அலட்சியப்படுத்தும் நாம், eco-friendly, மண்ணில் புதைத்து வைத்தால் மக்கக்கூடியது, வெளிநாட்டில் உற்பத்தியானவை என்று 20 ரூபாய்க்கு விற்கும் டப்பாவை 200 ரூபாய்க்கு விற்றாலும் வாங்கிக்கொள்கிறோம்.

மண்வளம் காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கரையாங்களையும், ஒட்டுண்ணிகளையும் HIT அடித்து ஒழித்துவிட்டு, மண் புழு உரம், இயற்க்கை உரம், organic என்றெல்லாம் கூறி குளிரூட்டி விற்கும் காய்கறிகளை அல்லவே நாடிச்செல்கிறோம்?

தெருவிற்கு தெரு அலையும், தினமும் நம் கண்ணில் படும் நாய்களுக்கும், மாடுகளுக்கும்  உணவிடவோ பாதுகாக்கவோ தோன்றுவதில்லை. ஆனால், மரக்கழிவுகளில் செய்தது, மிருகங்களைக்காக்க உங்கள் பங்கை அளியுங்கள்  என்று 5000, 6000 ரூபாய்க்கு விற்கும் காலணிகளை வாங்க ஆர்வம் காட்டுகிறோமே.. ஏன்??








தெருமுனையில் விற்கும் கற்றாழையில் தூசு படிந்திருக்கும் என்று ஒதுக்கி  விட்டு, கிராபிக்ஸ் கற்றாழையைக் காட்டி, டப்பிங் மொழியில் பேசி விற்பனை செய்யும் ஷம்பூவையும் கிரீமையும் வாங்குவதிலேயே திருப்தி அடைகிறோம்.


மூத்த தலைமுறையினருக்கு மாரடைப்பு வந்தால், அவர்களுக்குத் முக்கியத்தேவை மகன்/மகள்/பேரப்பிள்ளைகளின் அருகாமையும் அன்புமே தவிர, லிட்டர் 200, 300 ரூபாய்க்கு விற்கும்  ஐரோப்பிய சமையல் எண்ணெய் அல்ல.


இயற்கை கிருமி நாசினியான சாம்பிராணியை அலர்ஜி என்று ஒதுக்கி விட்டு , 35,000 ரூபாய்க்கு Ozone-free AC வாங்குவதே இப்பொழுது  கௌருவமாக கருதப்படுகின்றது. 


தாத்தாக்கள் வைத்திருக்கும் மஞ்சள் பைகள் கேலியாகப்பட்டது, ஆனால் ஷாப்பிங் மால் களில் 100 ரூபாயேனும் அதிகம் குடுத்துத்தானே துணிபைகளையும், காகிதப்பைகளையும் வாங்கி வருகிறோம். உண்மையில் நாம் தான் கேலிப்பொருள்களாகி வருகிறோம்.


இன்றெல்லாம் 'சுற்றுச்சூழல் விழிப்புணர்வு' விளம்பரங்களே ப்ளெக்ஸ் போர்டு களில் தான் வருகிறது.

இப்பொழுதெல்லாம்  குழந்தைகள் பல்லாங்குழியும் கிட்டிப்புல்லும் விளையாட சம்மர் கிளாஸ் போகத்தொடங்கி விட்டார்கள். இதை நாகரிக வளர்ச்சி என்று சொல்வதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.பார்க்கலாம், இந்த வளர்ச்சி எங்கே செல்கிறது என்று...